India

இறுதிச் சடங்கிற்கு NO GST.. ஆனால் இதற்கு வரி உண்டு : மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேசியது என்ன?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. பல அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளதால் உணவு பண்டங்களின் விலை உயர்ந்துள்ளது.

இதனால் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு விவாதம் நடத்தாமல் போராட்டத்தில் ஈடுபடும் எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து வருகிறது.

இந்நிலையில் மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விலைவாசி உயர்வு குறித்து விளக்கம் அளித்துப் பேசுகையில், "ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டது முதல் இரண்டாவது அதிகபட்ச வருவாய் ஜூலை மாதத்தில் கிடைத்துள்ளது. ஐந்து மாதமாக ரூ.1.4 கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி வருவாய் கிடைத்துள்ளது.

கொரோனா, ஒமைக்ரான், உக்ரைன் போர் உள்ளிட்ட சூழ்நிலைகளிலும் இந்தியாவில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. 7 % க்கு குறைவாகவே பணவீக்கம் உள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும் புதிதாகச் சுடுகாடு கட்டுவதற்குத் தேவையான மூலப்பொருள், உபகரணங்களுக்கு மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. ஆனால் இறுதிச் சடங்கு, உடல் அடக்கம், உடல் தகனம் உள்ளிட்ட சவக்கிடங்கு போன்ற சேவைகளுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.

Also Read: மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த தம்பி.. சுதாரித்து கப்பென்று catch பண்ண அண்ணன் : Viral Video