India
20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாய்.. Youtube மூலம் கண்டுபிடித்த மகள் - மும்பையில் நெகிழ்ச்சி !
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்தவர் ஹமிதா பானு. தனது குடும்ப வறுமை காரணமாக துபாயில் வீட்டு வேலைக்கு செல்ல முடிவெடுத்தார். அதன்படி கடந்த 2002 ஆம் ஆண்டு ஒரு ஏஜென்ட் மூலம் துபாய்க்கு செல்ல தயாரானார். ஆனால் அந்த ஏஜென்ட்டோ, ஹமிதாவை துபாய்க்கு அனுப்பி வைக்காமல், மாறாக பாகிஸ்தானுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
பாகிஸ்தானில் நிர்கதியாக நின்ற ஹமிதா, தனது குடும்பத்தாரை கூட தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருந்தார். பின்னர் பாகிஸ்தான் சிந்து மகாணத்தில் உள்ள ஐதாராபத் பகுதியில் வசிக்க தொடங்கிய அவர், தனது காலத்தை கழிக்க முடிவு செய்து கிடைத்த வேலைகளையெல்லாம் செய்திருக்கிறார். இதையடுத்து, அந்த பகுதியில் வசிக்கும் ஒரு நபரை முறைப்படி திருமணமும் செய்துகொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் உயிரிழந்தார். இதனால் தனிமையை உணர்ந்த ஹமிதா, தனது சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் காட்டியுள்ளார். அதன்படி, அந்த பகுதியை சேர்ந்த வாலியுல்லா மரூப் என்பவரிடம் இவரது கதையை கூறியுள்ளார். மேலும் தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது 70 வயதாகும் ஹமிதாவின் ஏக்கத்தை புரிந்து கொண்ட வாலியுல்லா, அவரை அவரது குடும்பத்துடன் எப்படி சேர்த்து வைப்பது என்று யோசித்து Youtube சேனல் ஒன்றை தொடங்கினார். பின்னர் அதில், ஹமிதா பானுவை குறித்த பதிவுகளை பதிவிட்டிருக்கிறார். அதோடு, மும்பையில் உள்ள சமூக ஆர்வலர்கள் யாரேனும் இந்த வீடியோவை பார்த்தால் ஹமிதா பானுவுக்கு உதவுமாறும் கேட்டு கொண்டார்.
இதை தொடர்ந்து இது குறித்த வீடியோவை மும்பையை சேர்ந்த காப்லான் சேக் என்பவர் பார்க்க, அதனை தான் இருக்கும் அனைத்து குழுவிற்கும் பகிர்ந்திருக்கிறார். பின்னர் அந்த வீடியோ பதிவு குறித்து தகவல் பரவ, ஹமிதாவின் மகள் யாஸ்மின் பஷிர் சேக் என்பவர் மும்பையில் இருக்கும் ஒரு பகுதியில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரது மகளை தொடர்புகொண்டு தாய் இருக்கும் இடத்தை அந்த குழுவினர் தெரிவித்தனர். பின்னர், தனது தாயை தொடர்புகொண்ட யாஸ்மின், 20 ஆண்டுகளுக்கு பிறகு தாயை வீடியோ கால் மூலம் பார்த்து பேசி மகிழ்ந்துள்ளார்.
இதுகுறித்து ஹமிதாவின் மகள் யாஸ்மின் கூறும்போது, தனது தாய் ஏஜென்ட் செய்த தவறால் வேறு பகுதிக்கு சென்றதாகவும், அவரை தாங்கள் தேடும்பனியில் ஈடுபட்டு அது தோல்வியில் முடிந்ததாகவும், ஆனால் தற்போது தனது தாய் பத்திரமாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் தற்போது தனது தாய் ஹமிதா பானுவை மீண்டும் மும்பைக்கு அழைத்து வர இந்திய அரசிடம் உதவி கேட்கவுள்ளதாகவும் யாஸ்மின் கூறினார். 20 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன தாயை ஒரு youtube மூலம் மகள் கண்டுபிடித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“175 இடங்களில் உதயசூரியன்; 234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின்தான் வேட்பாளர்!”: முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
“சிலிண்டர் வழங்குவது மாநில அரசின் கையிலா இருக்கிறது?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“பழனிசாமி மகா பொய்யர் என்பதை சாத்தான்குளம் வழக்கு மெய்ப்பித்துள்ளது!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
நிபந்தயற்ற ஆதரவு! : “உண்மையில் தியாகம்தான்.. வரலாறு பாராட்டும்...” - கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் பாராட்டு!
-
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துலாம் தேவை இல்ல... - நெத்திப்போட்டில் அடித்த ஒன்றிய பாஜக அரசு! - விவரம்!