India

பெண்களுக்கு நடக்கும் அநியாயங்கள்.. வாழ்நாள் முழுக்க குளிக்க மாட்டேன் என சபதம் எடுத்த முதியவர்: பின்னணி?

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியை அடுத்துள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் தான் தரம்தேவ் ராம். தற்போது 62 வயதாகும் இவர், சுமார் 22 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்து வருவதாக அவரே கூறியுள்ளார். இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் தனது குரு கூறியதால் 22 வருடம் குளிக்காமல் இருப்பதாக கூறியுள்ளார்.

அதாவது, 1975 ஆம் ஆண்டு தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்த இவர், 1978 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். எல்லா மனிதர்கள் போல், மனைவி, குழந்தைகள் என்று இல்லற வாழ்க்கையில் வாழ்ந்து வந்த இவர், திடீரென்று ஆழ்ந்த சிந்தனைக்குள் மூழ்கியுள்ளார்.

1987 ஆம் ஆண்டு, விலங்குகள் கொல்லப்படுதல், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருதல் உள்ளிட்ட அட்டூழியங்களை கண்ட இவர், எதனால் இப்படி எல்லாம் நடக்கிறது என்று சிந்தித்துள்ளார். இந்த சிந்தனைக்கு பதில் வேண்டி சாமியார் ஒருவரை அணுகியுள்ளார்.

அவரோ இவரை தனது சிஷ்யனாக சேர்ந்து கடவுளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளார். எனவே இவரும் அந்த சாமியாரை தனது குருவாக ஏற்றுக்கொண்டு கடவுளை வழிபட தொடங்கியுள்ளார். தரம்தேவ் ராமின் பயணம், பக்தி மார்க்கத்தை நோக்கி இருந்ததால் தான் செய்து கொண்டிருந்த வேலையை 2000 ஆம் ஆண்டில் விட்டுவிட்டார்.

இருப்பினும் அவரது குடும்பத்தார் அவரை வேலைக்கு செல்ல வற்புறுத்தியதால் மீண்டும் அவர் வேலைக்கு சென்றார். ஆனால் அப்போது அவரால் நீண்ட காலம் அங்கு இருக்க முடியவில்லை. ஏனென்றால் அவர் எடுத்துக்கொண்ட சபதம் அப்படி.

அவர் பக்தி வழியில் மூழ்கியிருந்த நேரத்தில், சமுதாயத்தில் நடைபெறும் குற்றத்தை கண்டு சாப்பிட மாட்டேன் என்றும், குளிக்க மாட்டேன் என்றும் கடவுள் முன்பாக சபதம் எடுத்திருக்கிறார். இதையறிந்த அவரது தொழிற்சாலை மேனேஜர், அவரை வேலையில் இருந்து வெளியேற்றினார்.

மேலும் வேறு வேலை பார்த்து வந்ததால் சாப்பிட மட்டும் செய்தார். இருப்பினும் தனது 40 ஆவது வயதில் குளிக்ககூடாது என்று முடிவெடுத்த இவர், தற்போது வரை குளிக்காமல் சபதத்தை கடைபிடித்து வருகிறார்.

இதனிடையே கடந்த 2003 ஆம் ஆண்டு இவரது மனைவி இறந்தபோதும் சரி, அதன்பிறகு ஒரு விபத்து காரணமாக இவரது ஒரு மகன் இறந்தபோதும் சரி, இறுதிச்சடங்கிற்கும் கூட குளிக்கவில்லை.

நாம் நமது வாழ்வில், இதுவரை நாட்களாக, வாரங்களாக, மாதங்களாக குளிக்காத மனிதர்களை பற்றி கேட்டிருப்போம். ஆனால் இப்படி 1 அல்ல 2 அல்ல 22 ஆண்டுகளாக குளிக்காத இந்திய மனிதரை பற்றி கேள்விப்பட்டது இதுவே முதல்முறையாகும். அதுவும் சபதத்தின் அடிப்படையில் குளிக்க மாட்டேன் என்று அடம்பிடித்த மனிதர் என்றால் அது தரம்தேவ் ராம் தான்.

எல்லாவற்றிக்கும் மேலாக இவருக்கு இதுவரை உடல்நிலை சரியில்லாமல் இருந்ததில்லை என்று அந்த பகுதி மக்கள் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: நூடுல்ஸில் கலந்திருந்த எலி மருந்து.. இளம் பெண் பரிதாப பலி - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!