India

வெளிநாடுகளில் உள்ள இருக்கைகளில் பேராசிரியர் நியமனம்-தமிழ் மொழியை 8 ஆண்டுகளாக புறக்கணிக்கும் ஒன்றிய அரசு!

ஒன்றிய கலாச்சாரத் துறை சார்பில் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் இந்திய பேராசிரியர் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான ஊதியத்தை ஒன்றிய அரசே நேரடியாக வழங்கி வருகிறது.

வெளிநாடுகளில் தமிழ், சம்ஸ்கிருதம், இந்தி, வரலாறு, பொருளாதாரம், தத்துவம், பெங்காலி நாட்டுப்புற நடனம், உருது, புத்த மதம், இந்தியக் கல்வி என சுமார் 11 வகை பாடப் பிரிவுகளுக்கான இருக்கைகள் உள்ளன. கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்னர் இவற்றுக்காக வெளிநாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இருக்கைகள் இருந்தன.

ஆனால் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த இருக்கைகள் படிப்படியாக குறைந்து தற்போது 51 இருக்கைகள் மட்டுமே உள்ளன. அதிலும் இதில் பெரும்பாலானவை இந்தி, மற்றும் சம்ஸ்கிருத இருக்கைகளாகவே உள்ளன.

இந்த பட்டியலில் தமிழுக்கு வெறும் 2 இருக்கைகளே இருந்த நிலையில், இவற்றுக்கு கடந்த 2014ம் ஆண்டு முதல் பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. போலந்து நாட்டின் வார்ஸா பல்கலைக்கழகத்திலும், கிராக்கூப் யாகி எலோனியன் பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கைகள் உள்ளது. ஆனால் அங்கு சுமார் 8 ஆண்டுகள் யாரையும் நியமிக்காத ஒன்றிய அரசுக்கு தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், வெளிநாடுகளில் இந்திய பேராசிரியர் இருக்கைகள் நிரப்ப, இந்திய கலாச்சார உறவுக்கான கவுன்சிலின் (ஐசிசிஆர்) விளம்பரம் வெளியாகி உள்ளது. இந்த விளம்பரத்தில் தமிழ் இடம் பெற்றுள்ளது எனினும், அதற்காக விண்ணப்பிக்கும் ஐசிசிஆர் இணையதளத்தில் தமிழ் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் தமிழ் இருக்கைகளுக்கு பேராசிரியர்களை நியமிக்க ஒன்றிய பாஜக அரசு விரும்பவில்லை என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

Also Read: வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு : சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி-க்கள் விடிய விடிய போராட்டம்..!