India

தாயை காண சென்ற மகனுக்கு சிகரெட்டால் சூடு வைத்த கொடூர தந்தை : பின்னணி என்ன ?

மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியில் வசித்து வருபவர் அகமது கான் (வயது 33). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சனனுர் அலாம் ஷேக் (வயது 29) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. தற்போது இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மன வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதில் அந்த 5 வயது மகன் தந்தை அகமது கானுடன் வசித்து வருகிறார். தனது தாயை அவ்வப்போது சென்று சந்திக்கும் மகனை, அவரது தந்தை கண்டித்து வந்துள்ளார். மேலும் தாயை சந்திக்க கூடாது என்று அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை தனது தாயை சந்திக்க சென்ற மகன், தந்தை தனக்கு சிகெரெட்டால் சூடு வைத்ததாக அழுதுகொண்டே கூறியுள்ளார். மேலும் தன்னிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் சிறுவனின் தாய் சனனுர் அலாம் புகார் தெரிவித்துள்ளார்.

அவரளித்த புகாரின் அடிப்படியில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அகமது கானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயை காண சென்ற சிறுவனுக்கு சிகரெட்டால் தந்தை சூடு வைத்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: காதலை புறக்கணித்த மாணவி.. தீ வைத்து எரித்து கொடூரமாக கொன்ற டீச்சரின் கணவர் - ஒடிசாவில் பயங்கரம் !