India

கடவுளுக்கு எதிராக புகார் கொடுத்த விவசாயி.. உ.பி.யில் அதிர்ச்சி - பின்னணி என்ன ?

உத்தர பிரதேச மாநிலம் ஜாலா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுமித் குமார். இவர் அந்த பகுதியில் விவசாய தொழில் செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவர் வசிக்கும் பகுதியில் இருக்கும் தாசில்தாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அவரளித்த புகார் மனுவில், "எனது கிராமத்தில் தேவையான அளவு மழை பெய்யாததால், கடுமையான வறட்சி காணப்படுகிறது. இந்த வறட்சிக்கு காரணம் இந்திர தேவர் தான். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அந்த புகார் மனுவை தாசில்தார் படிக்காமலே நடவடிக்கை எடுக்குமாறு மேலதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து தற்போது இந்த புகார் குறித்த புகைப்படம் வைரலானதையடுத்து, தான் அதை மேலதிகாரிகளுக்கு அனுப்பவில்லை என்று தாசில்தார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் தாசில்தார் கூறுகையில், "சம்பூர்ண சமாதான் திவஸ் அன்று பெறப்படும் புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படும். மேலே குறிப்பிட்டது போன்ற மனுக்கள் எந்த அலுவலகத்துக்கும் அனுப்பப்படாது. இது தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது" என தெரிவித்தார்.

இது குறித்து விவசாயி சுமித் குமார் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் நிலவும் வறட்சியால் மக்கள் கடும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். அதனை உயர் அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு செல்லவே இப்படி ஒரு புகாரை எழுதினேன்" என்று தெரிவித்தார்.

தனது கிராமத்தில் ஏற்படும் வறட்சிக்கு இந்திர கடவுள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி ஒருவர் அளித்துள்ள புகார் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கும்பகோணம் TO தென்னாப்பிரிக்கா.. பழமையான சிலைகளை கடத்த முயன்ற நபர் கைது !