India

நுபுர் சர்மா வீடீயோவை பார்த்ததால் ஆத்திரம்.. இளைஞரை கத்தியால் குத்திய கும்பல்.. பீகாரில் அதிர்ச்சி!

நபிகள் நாயகம் பற்றி பா.ஜ.க செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள், சர்ச்சையை உருவாக்கிய நிலையில், அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது.

மேலும் நுபுர் சர்மாவைக் கைது செய்யக்கோரி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் மூண்டது. இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக பல இடங்களில் கடைகள் சூறையாடப்பட்டது.

அதேவேளையில் நுபுர் சர்மாவின் விமர்சனத்தை ஆதரித்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்த கண்ணையா லால் டெலி என்பவர் 2 நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி பகுதியை சேர்ந்தவர் உமேஷ் கோல்ஹே என்பவர் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்குக்கும் நுபுர் சர்மாவின் ட்வீட் காரணம் என தகவல் வெளியானது.

இதனிடையே, நுபுர் சர்மாவின் வழக்கு விசாரித்த உச்சநீதிமன்றம் "அவரின் தேவையில்லாத உளறல்களால் நாடு இப்போது தீக்கிரையாகியுள்ளது.இது அவமானகரமானது. இதற்காக அவர் நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என கருத்து தெரிவித்தது.

தம் மீதான இந்த விமர்சனங்களை நீதிபதிகள் திரும்பப் பெற வேண்டும் என்றும், தம் மீதான வழக்குகளை ஒருங்கிணைத்து விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் நுபுர் சர்மா முறையிட்டார். நுபுர் சர்மாவின் மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ஆகஸ்ட் 10-ந் தேதி அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் வரை இவ்வழக்கில் அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது

இந்த நிலையில், நுபுர் சர்மா முகமது நபியை அவதூறாகப் பேசிய வீடியோவை பார்த்ததால் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சீதாமர்கி மாவட்டத்தைச் சேர்ந்த அன்கித் ஜா (23) என்ற இளைஞர் பொது இடத்தில் அமர்ந்து தனது செல்போனில் நுபுர் சர்மாவின் வீடியோவை பார்த்ததாக கூறப்படுகிறது.

அப்போது இதைப்பார்த்த 4 பேர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அவர்கள் தங்களிடமிருந்த கத்தியால் அன்கித் ஜாவை குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அன்கித் ஜாவை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த செய்தி வெளியாகி பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதே பகுதியை சேர்ந்த 4 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு நுபுர் சர்மா காரணமில்லை என்றும், முன்பகை காரணமாக இந்த கொலை நடந்துள்ளது என்றும் போலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Also Read: காதல் தோல்வியால் MBA பட்டதாரிக்கு நேர்ந்த சோகம்!3 ஆண்டுக்கு பின்னர் உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!