India

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. தப்பிக்க ஓடும் காரில் இருந்து குதித்த பெண்..

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனது மருமகளுடன் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அப்போது கடந்த 6 நாட்களுக்கு முன்பு கடைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து, 21 வயதுடைய இளம்பெண் ஒருவர் வேலை தேடி வந்துள்ளார். இவர்களும் அந்த இளம்பெண்ணை உடனே வேலையில் சேர அனுமதித்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல், அந்த பெண் வேலையை முடித்து வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். அப்போது அந்த பெண்ணை, தனது காரில் வீட்டில் விடுவதாக காரில் ஏற கூறியுள்ளார், ஹோட்டல் உரிமையாளர். முதலில் அந்த பெண் மறுக்க, பிறகு இரவு நேரம் என்பதால் காரில் எறியுள்ளார்.

அந்த கார் போய்க்கொண்டிருக்கும்போது, அந்த நபர், இளம்பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியுள்ளார். பின்னர், பாலியல் சீண்டலில் ஈடுபட முயற்சித்துள்ளார். இதற்கு அந்த இளம்பெண், மறுப்பு தெரிவித்ததோடு மிரட்டியும் உள்ளார். இருப்பினும், அந்த நபர் அவரை வலுக்கட்டயமாக சீண்டியதால், வேறு வழியின்றி ஓடும் காரில் இருந்து கதவை திறந்து குதித்துள்ளார் அந்த இளம்பெண்.

அப்போது அங்கிருந்த ஜனேஷ்வர் மிஸ்ரா பார்க் அருகே விழுந்துள்ளார். ஓடும் காரில் இருந்து குதித்தால், அவருக்கு பலமான காயம் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். இதனை கண்ட சாலையில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள், இளம்பெண்ணை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர், அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தனக்கு நேர்ந்த கொடுமைகளை கதறி அழுது கூறியுள்ளார். இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 6 தனிப்படை குழுவை கொண்டு ஹோட்டல் உரிமையாளரை 2 மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் அவர் ஓட்டி வந்த காரையும் கைப்பற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி, சம்பவம் நிகழ்ந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சியையும் ஆய்வு செய்து வருகின்றனர். வேலைக்கு வந்த 21 வயது இளம்பெண்ணிடம் ஹோட்டல் உரிமையாளர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கொரோனா பாதிப்பால் ஓய்வு.. மக்கள் பணிக்கு no rest.. உதவி கேட்ட 6 பேருக்கு நேரடியாக போனில் பேசிய முதல்வர்!