India

“ஆற்றில் குளிக்க சென்ற சிறுவனை முழுதாக முழுங்கிய முதலை..?” : ஊர்மக்கள் திரண்டதால் நடந்த பரபரப்பு!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஷியோபூர் என்ற பகுதியில் ரகுநாத்பூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சம்பல் என்ற குளத்தில் அந்தர் சிங் என்ற 7 வயது சிறுவன் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த குளத்தில் இருந்த முதலை ஒன்று, அந்த சிறுவனை கவ்வியுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் அந்த சிறுவனை மீட்க முயற்சித்தபோது, அந்த முதலை சிறுவனை விழுங்கியுள்ளதாக கூறப்படுகிறது..

பின்னர் இது குறித்து அந்த சிறுவனின் பெற்றோருக்கு தகவல் அளிக்க, சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் அந்த சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குச்சிகள், கயிறு மற்றும் வலை மூலம் முதலையை பிடித்த பொதுமக்கள், முதலையை ஆற்றிலிருந்து வெளியே இழுத்து கொண்டு வந்தனர். இதனிடையே இது தொடர்பாக தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பொதுமக்கள் முதலையின் வயிற்றுக்குள் இருக்கும் சிறுவனை மீட்பதில் முனைப்பு காட்டி வந்த நிலையில், அவர்களிடம் இருந்து முதலையை பத்திரமாக மீட்பதில் காவல்துறையினர் முயற்சி செய்தனர். ஆனால் அந்த ஊர் பொதுமக்களும், சிறுவனின் பெற்றோர்களும் முதலையின் வயிற்றை அறுத்து சிறுவனை மீட்க வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தனர். இதையடுத்து நீண்ட முயற்சிக்கு பிறகு, பொதுமக்கள் முதலையை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து ரகுநாத்பூர் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "7 வயது சிறுவன் அந்தர் சிங், ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் மூழ்கியிருக்கலாம். ஆனால் சிறுவனை முதலை விழுங்கியதாக எண்ணி, பொதுமக்கள் அதனை அறுக்க நினைத்தனர். தற்போது அவர்களை சமாதானப்படுத்தி, முதலையை நாங்கள் மீட்டுள்ளோம். மேலும் சிறுவனை தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது” என்றார்.

Also Read: “மக்கள் தொகையை கட்டுப்படுத்த இதுவா வழி ?” - பாஜக அமைச்சரின் பதிவால் எழுந்த சர்ச்சை !