India

சுரங்கப்பாதை நீரில் சிக்கிய பள்ளி பேருந்து.. மாணவர்களை துரிதமாக மீட்ட பொதுமக்கள் - பெருகும் பாராட்டு!

தெலுங்கானாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல சுரங்கபாதைகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில் அங்குள்ள மஹ்பூப் நகரில் பள்ளிப்பேருந்து ஒன்று குழந்தைகளை ஏற்றி பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தது.

அப்போது கொடூரூர்-மச்சனப்பள்ளி என்ற பகுதியின் அருகே ரயில் பாலத்தின் கீழே உள்ள சுரங்க பாதையில் அந்த பேருந்து செல்ல முயன்றுள்ளது.

அந்த சுரங்க பாதையில் தண்ணீர் அதிகம் இருந்ததால் ஓட்டுநர் தயங்கியுள்ளார். ஆனால், தொடர்ந்து செல்லலாம் என முடிவெடுத்த அவர் சுரங்க பாதையில் வண்டியை செலுத்தியுள்ளார்.

அப்போது அங்கிருந்த நீரில் பள்ளி வேன் சிக்கிக்கொண்டது. இதனால் அந்த பேருந்தில் இருந்த மாணவர்கள் கூச்சலிட்டுள்ளனர். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்ட அங்கு இருந்தவர்கள் உடனடியாக மீட்பு பணியில் இறங்கியுள்ளனர்.

நீரில் குதித்து வேனில் இருந்து ஒவ்வொரு குழந்தையாக அவர்கள் மீட்டுள்ளனர். மேலும், பள்ளி பேருந்தையும் பத்திரமாக நீரில் இருந்து வெளியே கொண்டுவந்துள்ளனர். பொதுமக்கள் உடனடியாக களத்தில் இறங்கி பொதுமக்களை மீட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த மீட்பு பணி தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பலரும் விரைவாக பள்ளி சிறுவர்களை மீட்ட பொதுமக்களை பாராட்டி வருகின்றனர்.

Also Read: மைதானத்தில் நுழைந்த போராட்டகாரர்கள்.. ஸ்தம்பித்து நின்ற ஆஸ்திரேலிய - இலங்கை வீரர்கள் : நடந்தது என்ன?