India

இலங்கையாக மாறும் இந்தியா?.. சமையல் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு : ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில், சமையல் எரிவாயு 1,000 ரூபாயைத் தாண்டிய நிலையில் மேலும் 50 உயர்ந்துள்ளது. அதாவது, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டுப் பயன்பாட்டிற்கான ஒரு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1068.50 உயர்ந்துள்ளது.

கடந்த மே 1 அன்று வர்த்தகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலையை மட்டுமே மோடி அரசு உயர்த்தி இருந்தது. 19 கிலோ வர்த்தகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை, ஒரேநாளில் 102 ரூபாய் உயர்த்தப்பட்டதன் காரணமாக, அதன் விலை 2,355 ரூபாயாக அதிகரித்தது. பின்னர் மீண்டும் விலை ரூ.187 குறைந்து ரூ.2,186க்கு விற்பனையானது.

வீட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு 2 மாதமாக உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் அதன் விலை ரூ.965.50 ஆக இருந்தது. அதன்பிறகு மே மாதத்தில் வீட்டுப் பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையை 50 ரூபாய் உயர்த்தியது மோடி அரசு.

இதன் காரணமாக, இந்திய வரலாற்றில் முதன்முறையாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.1,000 மேல் உயர்த்தி, ஏழை, நடுத்தர மக்களின் வயிற்றிலடித்த முதல் பிரதமர் என்ற சாதனையை மோடி படைத்துள்ளார் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் ஒருமாதம் கழித்து மீண்டும் சிலிண்டரின் விலையை 50 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மேலும் ரூ.50 அதிகரித்து ரூ.1068.50க்கு விற்பனையாகிறது.

கடந்த 2021 ஜனவரியில் வீட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 710 ரூபாயாக இருந்தது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, கடந்த 2021 அக்டோபர் 6-ஆம் தேதி ரூ.915.50 என்ற அளவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர், 2022 மே மாதத்தில் 50 ரூபாய் உயர்த்தப்படவே சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,015 ஆக அதிகரித்தது.

தற்போது மேலும் 50 ரூபாய் விலை உயர்த்தப்பட்ட நிலையில், சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.1068.50ஆக அதிகரித்துள்ளது. கடந்த 17 மாதங்களில் சிலிண்டர் ஒன்றுக்கு 315 ரூபாயும், 2022-ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் 150 ரூபாயும் சிலிண்டர் விலையை மோடி அரசு உயர்த்தியுள்ளது.

இந்த விலை உயர்வு, அடித்தட்டு மக்கள் தலையில்தான் விழுகிறது. ஏற்கனவே, கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் பொருளாதார ரீதியில் கடுமையான பாதிப்புக்கு உள்ள நிலையில், காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இலங்கை நிலைக்கு இந்தியா ஆளாகுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

Also Read: “கேஸ் விலை உயர்வுக்கு காரணம் என்ன? - சிலிண்டர் மானியத்தை ஏன் நீக்கியது?” : மோடி அரசின் சதி அம்பலம்!