India

“வெளிநாட்டில் காந்தி.. இந்தியாவில் கோட்சேவா..” : பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்த யெச்சூரி !

USCIRF என்று சொல்லப்படும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம், கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியா குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், மத சிறுபான்மை மக்கள் மீது கொலை, தாக்குதல், மிரட்டல் ஆண்டு முழுவதும் நடந்துள்ளது குறித்தும், பசுவதை, மாட்டிறைச்சி விவகாரங்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது குறித்த விபரங்களும் இடம்பெற்றிருந்தது.

மேலும் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகளில் மதசுதந்திரம் என்பது ஆபத்து நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனையடுத்து இது குறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, USCIRF கருத்துகள் இந்தியாவின் அரசியலமைப்பு கட்டமைப்பு, பன்மைத்தன்மை மற்றும் அதன் ஜனநாயக நெறிமுறைகள் பற்றிய கடுமையான புரிதலின் குறைபாடுகளை பிரதிபலிக்கக்கூடியதாக இருப்பதாக கூறினார்.

இந்த நிலையில், நேற்று செய்தியாளரை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியாவில் மத சுதந்திரம் குறித்த அமெரிக்க குழுவின் அறிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்தது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார்.

அதாவது, "நாட்டை அடிப்படையாகக் கொண்ட அனைத்து வெளிநாட்டு அறிக்கைகளையும் ஒன்றிய அரசு நிராகரிக்கிறது. இந்த அரசாங்கமானது நம் நாட்டு மக்களுக்கு அரசியலமைப்பு அடிப்படையில் வழங்கப்பட்ட மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள் என அனைத்தையும் போட்டு நசுக்குகிறது.

ஒருபுறம் நம் நாட்டில் ஜனநாயகம் உள்ளது என்று அனைவருக்கும் சொல்ல விரும்பும் இவர்களே, மறுபுறம் நாட்டிலுள்ள ஜனநாயக உரிமைகளை நசுக்குகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக வெளிநாடுகளுக்கு செல்லும்போது அங்கே காந்தியையும், இந்தியாவில் கோட்சேவையும் தான் பா.ஜ.க. அரசு தனது கொள்கையாக எடுத்துக்கொள்கிறது" என்று பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்தார்.

Also Read: பக்கத்து வீட்டு நாய் குரைத்ததால் ஆத்திரம்.. நாய் உரிமையாளரை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கிய நபர்!