India

“இரவில் ரயிலில் பயணிப்பவர்களா நீங்கள் ?” - உங்களுக்காக புதிய திட்டத்தை அறிவித்த இந்திய ரயில்வே!

பொதுமக்களின் வசதிக்காக இந்திய ரயில்வே நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கி வருகிறது. இந்த ரயில்களில் ஒரு நாளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். பயணிகளில் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

பெரும்பாலும் பொதுமக்கள் இரவுநேர எக்ஸ்பிரஸ் ரயில்களிலேயே பயணம் செய்ய விரும்புவதால் அந்த நேரங்களில் அதிக ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இரவு நேரத்தில் பயணம் செய்யும் பயணிகள் சிலர் தாங்கள் இறங்கும் ரயில் நிலையங்களை தவற விடுவது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இது போன்ற நிகழ்வுகளை தவிர்ப்பதற்காக ஐ.ஆர்.டி.சி புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இரவில் பயணம் செய்யும் பயணிகள் தாங்கள் இறங்கும் ரயில் நிலையத்தை தவற விடுவோம் என்ற அச்சம் ஏற்பட்டால் '139' என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு அதில் கேட்கும் தகவல்களை பகிர வேண்டும். அப்படி செய்தால் நீங்கள் இறங்கும் ரயில் நிலையங்கள் வருவதற்கு 20 நிமிடங்கள் முன்னால் உங்களை தூக்கத்தில் இருந்து எழுப்பும் வகையில் எச்சரிக்கை அழைப்பு உங்கள் போனுக்கு அனுப்பப்படும்.

இந்த சேவையை இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் இந்த சேவைக்கு இன்டர்நெட் வசதி தேவை இல்லை எனவும் ரயில்வே அறிவித்துள்ளது.

Also Read: ஓடிக்கொண்டிருந்த ரயிலில் தீ விபத்து.. அலறியடித்து ரயிலை நிறுத்திய பயணிகள்.. நள்ளிரவில் பரபரப்பு!