India

“ஆண் பெண் நட்பிலும் ஒரு எல்லை உள்ளது.. அதை மீறக்கூடாது” - வழக்கில் அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம் !

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சேர்ந்தவர் ஆஷிஷ் சகோர். கடந்த 2019 ஆம் ஆண்டு இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பு ரீதியாக பழகி வந்த இவர்கள், நாளடைவில் அதற்கு அடுத்த கட்டமாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்த போதெல்லாம் உடலுறவில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த அந்த பெண் பிறகு, திருமணம் செய்துகொள்வதாக ஆஷிஷ் கூறியதால் சம்மதித்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் நெருக்கம் அதிகமானது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண், தான் 6 வாரங்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறி, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஆஷிஷ், தான் வேறு ஒரு பெண்ணை தீவிரமாக காதலிப்பதாக கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து தன்னை காதலிப்பது போல் ஏமாற்றி, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர் மீது நடவடிக்கை எடுத்தனர். மேலும் இந்த வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக ஆஷிஷ் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இவரது ஜாமீன் வழக்கு கடந்த 24 ஆம் தேதி நீதிபதி பாரதி டாங்கரே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி, "ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள நட்பு என்பது பாலின அடிப்படையிலானது அல்ல. பாலினத்தைப் புறக்கணித்து, மனரீதியாக இணக்கமாகவோ அல்லது ஒருவரையொருவர் நண்பர்களாக நம்பியோ, அவர்களுக்கு இடையே நெருக்கம் உருவாகலாம்.

ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டால் அதை வைத்து ஆண் பாலியல் ரீதியாக உறவிற்கு வறுபுறுத்துவதற்கு எந்த உரிமையும் இல்லை. பெண்கள் எந்த ஒரு உறவாக இருந்தாலும் அதில் குறைந்தபட்சமாக மரியாதை எதிர்பார்ப்பார்கள். இந்த வழக்கில் மனுதாரர் திருமணம் செய்து கொள்வதாக கூறி அப்பெண்ணை ஏமாற்றியுள்ளார்.

அந்தப் பெண்ணிற்கு இவர் திருமணம் செய்து கொள்வதாக கூறிய வார்த்தை தான் உடலுறவு வைத்து கொள்ள ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. எனவே இந்த வழக்கை மேலும் நன்றாக விசாரிக்க வேண்டும். ஆகவே மனுதாரரின் மனு ரத்து செய்யப்படுகிறது” என்று அறிவுரை கூறியதோடு ஆஷிஷ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு தற்போது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read: பெரியம்மா மரணத்துக்கு வந்த இடத்தில் 48 பவுன் நகையை திருடிய இளம்பெண்.. பெரியப்பாவால் கம்பி எண்ணும் அவலம் !