India

அரசு வங்கிகளை முழுமையாக தனியாருக்கு கொடுக்க பா.ஜ.க அரசு திட்டம்? பொதுமக்கள் அதிர்ச்சி!

2014ம் ஆண்டு மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பொறுப்பேற்றதில் இருந்து நாட்டை தனியார் மயத்தை நோக்கி கொண்டுசென்று வருகிறது. இதன் காரணமாக இந்தியாவின் பெருமை மிக அடையாளமாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசு ஒவ்வொன்றாக விற்பனை செய்து வருகிறது.

இதில் ஒரு பகுதியாக ஏர் இந்தியா நிறுவனம் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் எல்.ஐ.சி அமைப்பின் சில பங்குகள் தனியாருக்கு திறந்துவிடப்பட்டன. ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களும் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சில நாட்களுக்கு முன்னர் ஒன்றிய அரசு தனது பட்ஜெட் அறிக்கையில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் திட்டத்தை அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் வங்கி தனியார்மயமாக்கலில் இருக்கும் முக்கியமான கட்டுப்பாட்டை விலக்க புதிய மசோதா கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக மழைக்காலக் கூட்டத்தொடரில் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றிய அரசு வைத்துள்ள பங்குகளை மொத்தமாக விற்பனை செய்துவிட்டு வெளியேற வழிவகுக்கும் முக்கியமான மசோதா இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது உள்ள சட்டத்தின்படி, பொதுத்துறை வங்கியை தனியாருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 51% பங்குகளை ஒன்றிய அரசு வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனை படிப்படியாக குறைக்கும் வகையில் இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்டமாக அரசிடம் இருக்கும் IDBI-யின் 45.48 சதவீத பங்குகளை விற்பனை செய்ய ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. IDBI வங்கியில் எல்ஐசி நிறுவனம் சுமார் 49.24 சதவீத பங்குகளை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பைக்கில் சென்ற பெண்ணின் தலையில் விழுந்த தேங்காய்.. இணையத்தில் வலம்வரும் அதிர்ச்சி வீடியோ!