India

குஜராத் கலவரத்தை அம்பலப்படுத்திய சமூக செயற்பாட்டாளர்; ட்விட்டரில் ட்ரெண்டாகும் #FreeTeesta: பின்னணி என்ன?

குஜராத் மாநிலத்தில் இந்துத்வா கும்பல்களால் இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த வழக்கை நடத்தி வந்தவர் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாத். இவர் கடந்த ஜூன் 25 அன்று குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். குஜராத் பா.ஜ.க அரசின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் இந்துத்வா கும்பல்களால் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரம் நிகழ்ந்தது. இதில் பல ஆயிரம் இஸ்லாமியர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அது தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அப்போதைய குஜராத் முதலமைச்சரும் தற்போதைய பிரதமருமான மோடி உள்பட 64 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கு எதிராக, கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்தமனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சான்டாக்ரூஸ் பகுதியில் வசித்து வந்த சமூகச் செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாத்தை குஜராத் மாநில அகமதாபாத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சனிக்கிழமையன்று கைது செய்தனர். முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீகுமாரையும் கைது செய்தனர். ஜூன் 26 ஞாயிறன்று அதிகாலை அகமதாபாத்தில் உள்ள குற்றப் பிரிவு அலுவலகத்துக்கு டீஸ்டா செதல்வாத் அழைத்துவரப்பட்டார்.

குஜராத் கலவரம் தொடர்பாக பொய்யான ஆதாரங்களை சிறப்புப் புலனாய்வுக்குழு மற்றும் விசாரணை ஆணையத்திடம் டீஸ்டா செதல்வாத் வழங்கியதாகக் கூறி குஜராத் மாநிலம் அகமதாபாத் காவல் நிலையத்தில் டி.பி.பராட் என்ற குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் புகார் அளித்தார்.

இந்தப் புகாரை உடனடியாகவே ஏற்றுக்கொண்டு, டீஸ்டா செதல்வாத் கைது செய்யப்பட்டார். 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈசான் ஜாப்ரி உட்பட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கை ஜாகியா ஜாஃப்ரியுடன் இணைந்து நடத்தி வந்தவர் சமூகச் செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாத்.

தற்போது அந்த வழக்கிலிருந்து மோடி உட்பட 64 பேரும் விடுவிக்கப்பட்டதால், வன்மத்துடன் டீஸ்டா செதல்வாத்தை குஜராத் பா.ஜ.க அரசு கைது செய்துள்ளதாக அரசியல் கட்சியினர், சமூக செயற்பாட்டாளர்கள் கண்டித்துள்ளனர்.

மேலும் டீஸ்டா செதல்வாத்தை விடுதலை செய்யவேண்டும் என #FreeTeesta என்ற ஹேஸ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். பழங்குடியின மக்களின் உரிமைப் போராளி ஸ்டேன் சுவாமி மீது போலியான வழக்குகளைத் தொடர்ந்து அவரைத் தொடர்ந்து சிறையில் அடைத்து மோடி அரசு வருத்திய நிலையில் அவர் கடந்த ஜனவரியில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Also Read: “துரோகத்தால் தொடங்கி - துரோகத்தால் இயங்கும் கட்சி அதிமுக - ‘தினமலருக்கு’ ஏன் எரிகிறது?” - முரசொலி தாக்கு!