India

“நீ கொண்டுவந்த உணவை வாங்கமாட்டேன்” - முகத்தில் எச்சில் துப்பி Zomato ஊழியரை சாதியை சொல்லி தாக்கிய நபர்!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த வினீத் என்பவர் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஜொமேட்டோவில் கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், வழக்கம் போல ஒருவர் ஆர்டர் செய்த உணவை டெலிவரி செய்ய அவரின் முகவரிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த உணவை ஆர்டர் செய்தவர், வினீத் குமாரிடம் அவரது பெயரையும், அவரது சாதியையும் கேட்டுள்ளார்.

முதலில் இதற்கு பதில் சொல்ல மறுத்த வினீத் பின்னர் தான் சார்ந்த சாதி பெயரை கூறியுள்ளார். உடனே நீ பட்டியல் இனத்தை சேர்ந்தவர் எனக் கூறி வினீத்தை திட்டத்தொடங்கிய அவர், தீண்டத்தகாதவனின் கையில் இருந்த உணவை வாங்க மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

உடனே வினீத்தும் ஆர்டர் வேண்டாம் என்றால் அதை உடனே கேன்சல் செய்யுமாறு கூறியுள்ளார். ஆனாலும் அவரை விடாமல் தொடர்ந்து திட்டிய அந்த நபர், வினீத்தின் முகத்தில் எச்சில் துப்பியதோடு, அருகில் இருந்த நண்பர்களை அழைத்து அவரை தாக்கியுள்ளார். மேலும் வினீத்தின் இருசக்கர வாகனத்தையும் அவர்கள் பறித்துக்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வினீத் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் போலிஸார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலிஸார் தலையீடு காரணமாக இரு சக்கர வாகனம் வினீத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சாதி ரீதியாக ஜொமேட்டோ ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “காதல் திருமணம் செய்தவர் ஆணே இல்லை - உண்மை தெரிய இத்தனை நாட்களா?” : அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?