India

"என்னை யாரும் அழைக்கவில்லை" .. தனது திருமணத்துக்கு செல்லாத MLA மீது வழக்குபதிவு.!

ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் ஆட்சியில் இருந்து வருகிறது. அந்த கட்சி சார்பில் திர்தோல் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் பிஜய் சங்கர் தாஸ். இவருக்கும் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக இருவரும் சேர்ந்து திருமண பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளனர். விதிமுறையின் படி 30 நாட்களில் திருமணத்தை பதிவுசெய்ய வேண்டும்.

இதனால் 30 நாள்கள் முடிந்து திருமணத்தை பதிவு செய்ய இருவரும் நாள் குறித்துள்ளனர். அதன்படி குறிப்பிட்ட அந்த நாளில் பெண் மற்றும் அவரது வீட்டார் ஆகியோர் திருமண பதிவு அலுவலகத்துக்கு வந்துள்ளனர். ஆனால், சொன்ன நாளில் எம்.எல்.ஏ பிஜய் சங்கர் தாஸ் பதிவு அலுவலகத்துக்கு வராமல் இருந்துள்ளார். மேலும் பெண் தரப்பில் இருந்து போன் மூலம் பலமுறை தொடர்ப்பு கொண்ட நிலையிலும் அவர் அதற்கு பதிலளிக்காமல் இருந்துள்ளார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த அந்த பெண், எம்.எல்.ஏ பிஜய் சங்கர் தாஸ் தன்னை ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள அந்தப் பெண்,``3 ஆண்டுகளாக நன்கு பழக்கமான எம்.எல்.ஏ பிஜய் சங்கர் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதியளித்திருந்தார். ஆனால் திருமணம் நெருங்கியதும் அவரின் சகோதரரும், அவர் குடும்பத்தினரும் என்னை மிரட்டினர்" எனக் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் எம்.எல்.ஏ பிஜய் சங்கர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் பேசிய அவர், "பதிவு அலுவலகத்துக்கு செல்லவேண்டும் என்று அந்தப் பெண்ணோ அல்லது வேறு யாரும் என்னிடம் சொல்லாததால் நான் போகவில்லை" எனக் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: தாயை விட கேமராமேனுக்கு முக்கியத்துவம் கொடுத்தாரா மோடி? : இணையத்தில் வைரலாகும் சர்ச்சை வீடியோ!