India

சாப்பாடு போடாத மனைவி.. கொலை செய்து சடலத்துடன் தூங்கிய கணவர்: பகீர் கிளப்பும் சம்பவம்!

டெல்லியில் உள்ள சுல்தான்பூரில் இருக்கும் தம்பதி வினோத் குமார் துபே (47) , சோனாலி (39). இவர்கள் இருவருக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் கணவர் மனைவி போல் மட்டும் இல்லாமல், நண்பர்களாகவும் பழகி வந்த வந்தனர். மேலும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தும் பழக்கமும் இந்த தம்பதிக்கு இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், அவர்கள் இருவரும் சேர்ந்து மது அருந்தி ஜாலியாக பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். பின்னர், போதையில் இருந்த கணவர் மனைவியிடம் சாப்பிடுவதற்கு உணவு கேட்டுள்ளார். ஆனால், மனைவியோ, நீயே சமைத்துக்கொள் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி, கணவன் மனைவியின் முகத்தில் தலையணை வைத்து அழுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, மனைவி இறந்தது கூட தெரியாமல் அவர் இறந்த உடலுடன் படுத்து உறங்கியுள்ளார். போதையில் இருந்த கணவர் மறுநாள் காலை எழுந்தபோது மனைவி இறந்து கிடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் செய்வதறியாது திகைத்த கணவர், வீட்டில் இருந்த ரூ.40,000 பணத்தை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

பின்னர் சோனாலி இறந்து கிடந்ததை பார்த்த அருகிலிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தப்பியோடிய வினோத் குமார் துபேவின் மொபைல் எண்ணை வைத்து, அவரது இருப்பிடத்தை கண்டறிந்த போலிஸார் அவரை கைது செய்தனர். அதோடு அவரிடம் இருந்து பை ஒன்றும் பறிமுதல் செய்தனர். அதில் 43,280 ரூபாய் பணம், இரண்டு மது பாட்டில்கள், ரத்த கரை படிந்த தலையணை ஆகியவை இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், வினோத் குமார் தனது மனைவியை போதையில் கொன்றுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலிஸார் அவரை சிறையில் அடைத்தனர்.

Also Read: 1 வருடத்திற்கு முன்பு நீரில் மூழ்கிய ஐபோன்... தேடிக் கண்டுபிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்த இளைஞர்!