India

ஆதார்,கை ரேகையை வைத்து 15 லட்சம் கொள்ளை.. நூதன முறையில் கொள்ளையடித்த கும்பல் சிக்கியது எப்படி?

ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஒன்று தனது பத்திரங்களை பதிவு செய்த பின்னர் வங்கி கணக்கில் இருந்து மர்மமான முறையில் தொடர்ந்து பணம் மாயமாகி வருவதாக சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில் வெங்கடேஸ்வரலு என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது மோசடி தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் படி, பத்திரப்பதிவு அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக பணிபுரிந்து பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வெங்கடேஸ்வரலு பத்திரப்பதிவு வெப்சைட்டிற்கு சென்று பத்திரப்பதிவு செய்தவர்களின் தகவல்களை பட்டர் பேப்பர் எனப்படும் காகிதத்தில் தரவிறக்கம் செய்து சேகரித்து வந்துள்ளார்.

பின்னர் கைரேகைகளை பதிவிறக்கம் செய்து ரப்பர் ஸ்டாம்ப் தயாரிக்கும் கடை ஒன்றில் இந்த தகவல்களை கொடுத்து அதேபோன்ற ரேகைகளை ரப்பர் ஸ்டாம்பாக தயாரித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ரப்பர் ஸ்டாம்ப்பை ஏடிஎம் இயந்திரங்களில் ரேகை பதிவு செய்து மினி ஸ்டேட்மெண்ட் எடுத்து அதே வங்கி கணக்கில் இருந்து பணம் திருடி வந்துள்ளார்.

மேலும் காவல்துறையினர் விசாரணையில் இதே முறையில் 149 பேரின் வங்கி கணக்கில் இருந்து 15 லட்சம் மோசடி செய்ததும் இந்த சம்பவத்தில் அவரது கூட்டாளிகளுக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக வெங்கடேஸ்வரலு மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேரை கைது செய்த காவல்துறையினர் . இவர்களிடமிருந்து ரூ. 3.50 லட்சம் பணம், 125 சிம் கார்டுகள், 20 செல்போன்கள் மற்றும் கைரேகை பதிவு செய்வதற்காக தயாரிக்கப்பட்ட கருவிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இந்த ஆன்லைன் மோசடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: போட்டோ எடுத்து அனுப்பினால் பம்பர் பரிசு.. அமலுக்கு வரும் ஒன்றிய அரசின் 50-50 சட்டம்!