India

வணிக வளாக தீ விபத்தில் உடல் கருகி 27 பேர் பலி.. டெல்லியில் கோர சம்பவம் - மீட்புப் பணி படங்கள்!

டெல்லியின் முண்டக் பகுதியின் அருகே உள்ள மெட்ரோ ரயில் அருகே உள்ள ஒரு வணிக வளாக கட்டிடத்தில் நேற்று மாலை 4.40 மணி அளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. சுமார் 24 தீயணைப்பு வாகனங்கள் போராடி அணைத்தும் தீ எரிவதை உடனே கட்டுப்படுத்தமுடியாமல் போனது.

இதனால் மூன்றடுக்கு கொண்ட வணிக வளாகத்தில் இருந்து இதுவரை 27 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கட்டிடத்தில் இருந்து சுமார் 60-70 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் ரவுட்டர் தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை முதல்கட்ட தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், விபத்து நேர்ந்தபோது கட்டிடத்தின் 2வது தளத்தில் நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்ததால், தளத்திலேயே அதிக உயிரிழப்பும் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் போலிஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், கட்டிடத்தில் தீ தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவுமே மேற்கொள்ளப்படாததால் அக்கட்டிடத்தின் உரிமையாளரை மனீஷ் லக்ராவை போலிஸார் தேடி வருகின்றனர்.

இதனிடையே தீவிபத்தில் இறந்தவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோர் தங்களின் இரங்கலைப் பதிவு செய்துள்ளனர்.

Also Read: திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. இளம் பெண்ணின் ஆபாச படத்தை உறவினர்களுக்கு அனுப்பிய முன்னாள் காதலன்!