India

கட்டிய மனைவியை துண்டால் கழுத்தை இறுக்கி கொன்ற கணவன்: பயந்து ஓட்டம் பிடித்த போதை ஆசாமி சிக்கியது எப்படி?

புதுச்சேரி அருகே கலித்தீர்தாள்குப்பம் பழனிநகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி (50). இவரது மனைவி செந்தமிழ் செல்வி (45). இவர்களுக்கு யுவராஜ் (24) என்ற மகன் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

கலியமூர்த்தி மதகடிப்பட்டில் உள்ள ஒரு காய்கறி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். மது குடிக்கும் பழக்கமுள்ள கலியமூர்த்தி அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வார் என்று கூறப்படுகிறது.

தந்தையின் இந்த செயலால் அவரது மகன் யுவராஜ் வளவனூர் பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி பணிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு கலியமூர்த்தி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன் - மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு இருவரும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

அப்போது ஆத்திரம் தீராத கலியமூர்த்தி தனது கழுத்தில் அணிந்திருந்த துண்டை எடுத்து செந்தமிழ்செல்வி கழுத்தில் போட்டு இறுக்கினார். இதில் மூச்சு திணறி செந்தமிழ்செல்வி இறந்து போனார். இதை பார்த்ததும் கலியமூர்த்தி பயந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது செந்தமிழ்செல்வி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து திருபுவனை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் செந்தமிழ் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கலியமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை துண்டால் கழுத்தை இறுக்கி கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.