India

’கற்பூரம் ஏற்றி கற்புக்கரசி என நிரூபி’ - கணவனின் கொடுமையால் தீக்கிரையான மனைவியின் கை : கோலாரில் கொடூரம்!

கற்புக்கரசி என நிரூபிக்கச் சொல்லி கணவனே மனைவியின் கையை எரிக்கச் செய்த சம்பவம் கோலார் மாவட்டத்தில் நடந்தேறியிருக்கிறது.

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள வீரனஹள்ளி என்ற கிராமத்தில் உள்ள வேமகல் காவல்நிலைய கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தா. இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் ஆகியிருக்கிறது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறான்.

மனைவியின் நடத்தை மீது ஆனந்தாவுக்கு எப்போதும் ஏதேனும் வகையில் சந்தேகம் ஏற்பட்டுக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இப்படி இருக்கையில், கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு, கையில் கற்பூரம் தனது கற்பு குறித்து நிரூபிக்கச் சொல்லி மனைவியை வற்புறுத்தியிருக்கிறார் ஆனந்தா.

இதனையடுத்து கணவனின் வற்புறுத்தலுக்கு ஏற்ப அந்த பெண்ணும் கையில் கற்பூரத்தை ஏந்தி அவர் கூற்றுப்படி செய்துக் காட்டியிருக்கிறார். ஆனால் இதன் காரணமாக அந்த பெண்ணின் கையில் தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது.

இது தொடர்பான விவகாரம் கிராமத்தினர் மத்தியில் பரவி பிறகு போலிஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனையறிந்து விசாரணை மேற்கொள்ள போலிஸார் வந்த நிலையில், ஆனந்தா தப்பியோடியிருக்கிறார்.

இருப்பினும் ஆனந்தாவின் மனைவி ஏதும் புகார் கொடுக்காமல் இருந்திருக்கிறார். ஆனால் போலிஸார் துருவி துருவி கேள்வி எழுப்பியதை அடுத்து உண்மையை கூறியிருக்கிறார்.

பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்த போலிஸார் தப்பியோடிய ஆனந்தா மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வரதட்சணை கொடுமை: மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்.. காவல்நிலையத்தில் இளம்பெண் பகீர் வாக்குமூலம்!