India

கர்ப்பிணி மனைவிக்கு டாய்லெட் க்ளீனர் கொடுத்து கொன்ற கணவன்.. தெலங்கானாவில் நடந்த கொடூரம்!

கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை டாய்லெட் க்ளீனர் குடிக்கச் சொல்லி கணவன் கட்டாயப்படுத்திய நிலையில் அப்பெண் உயிரிழந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிஜாமாபாத் மாவட்டத்தின் வருணி மண்டலத்தில் உள்ள ராஜ்பேட் தண்டா பகுதியைச் சேர்ந்தவர் தருண். அவரது மனைவி கல்யாணி. இவர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகியிருக்கிறது.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் கல்யாணி கருவுற்றிருக்கிறார். கர்ப்பம் தரித்த பிறகு கல்யாணிக்கும், தருணுக்கும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டிருக்கிறது.

கல்யாணியின் உருவ தோற்றத்தை வைத்து தருண் அவரை தொடர்ந்து கொடுமைப்படுத்தியிருக்கிறார். இப்படி இருக்கையில், கடந்த ஏப்ரல் 27ம் தேதியன்று மீண்டும் தம்பதிக்குள் இடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது.

அப்போது ஆத்திரமடைந்த தருண் கல்யாணியை கழிவறையை கழுவ வைத்திருந்த ஆசிடை குடிக்கச் சொல்லி வறுபுறுத்தியிருக்கிறார்.

இதனால் கடுமையான பாதிப்புக்கு ஆளான கல்யாணியை மீட்டு அவரது உறவினர்கள் நிஜாமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த புதனன்று கல்யாணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே தருண் தலைமறைவாகியிருக்கிறார். இந்நிலையில், கல்யாணியின் உறவினர் அளித்த புகாரின் பேரில் தெலங்கானா போலிஸார் தருணை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். விசாரணையில் தருண் கல்யாணியிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி துன்புறுத்தியதும் தெரிய வந்திருக்கிறது.

Also Read: போதையில் திருமணத்துக்கு வந்த மணமகன்; பெண்ணின் தந்தை எடுத்த அதிரடி முடிவு: விருந்தாளிக்கு அடித்த ஜாக்பாட்!