India

பூட்டை உடைக்காமலேயே 7 லட்சம் நகை கொள்ளை.. பேராசிரியர்கள் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை; புதுவையில் பகீர்!

புதுச்சேரி நெல்லித்தோப்பு மடத்து வீதியை சேர்ந்தவர் மோகன செல்வம் (47). இவரது மனைவி பூரணி. இவர்கள் இருவரும் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது 2 குழந்தைகளும் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

தினமும் காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கணவன், மனைவி இருவரும் கல்லூரிக்கு பணிக்கு செல்வது வழக்கம். அதற்கு முன்பாக வீட்டு சாவியை வீட்டின் மாடியில் வாடகைக்கு வசித்து வருபவரிடமும் சில சமயங்களில் பக்கத்து வீட்டுக்காரரிடமும் கொடுத்து செல்வது வழக்கம். அதுபோல் சம்பவத்தன்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கணவன்-மனைவி இருவரும் பணிக்கு சென்றனர்.

பின்னர் மாலையில் பணிமுடிந்து வீட்டுக்கு வந்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகை மாயமாகியிருந்தது.

வீட்டு கதவு எதுவும் உடைக்கப்படவில்லை. யாரோ வீட்டை திறந்து பீரோவில் இருந்த நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதன் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.

இதுகுறித்து மோகனசெல்வம் உருளையன்பேட்டை போலிசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். வீட்டுக்கதவு உடைக்கப்படாததால் நன்கு அறிமுகமான நபர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என போலிசார் கருதுகிறார்கள்.

இதையடுத்து வீட்டின் மாடியில் வசிப்பவர்கள் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களிடமும் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் வீட்டுவேலை செய்யும் பெண் மற்றும் ஏசி பழுதுபார்க்கும் மெக்கானிக் ஆகியோரிடமும் போலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி பேராசிரியர்கள் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “தாகமா இருக்கு..” - தண்ணீருக்கு பதில் ஆசிட் குடித்த கல்லூரி மாணவர்.. ஆந்திராவில் விபரீதம்: நடந்தது என்ன ?