India

காதலனுடன் வாழ தடையாக இருந்த மகன்: 3 வயது குழந்தையின் கழுத்தை நெரித்துக்கொன்ற கொடூர தாய்; கேரளாவில் பகீர்!

திருமணத்தை மீறிய உறவால் பச்சிளம் குழந்தைகளின் உயிரை காவு வாங்கும் நிகழ்வு அண்மைக் காலங்களாக தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில் கேரளாவில் இளம்பெண் ஒருவர் தனது 3 வயது மகனை கொன்ற சம்பவம் நடந்தேறியுள்ளது.

பாலக்காடு மாவட்டத்தில் உள்ள எலப்புள்ளி கிராமம் நென்மேனி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஷமீர், ஆஸி (22) தம்பதி. இவர்களது 3 வயது மகன்தான் முகமது ஷானு.

ஷமீருக்கும், ஆஸிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து தனித்தனியே வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஆஸியுடன் இருக்கும் குழந்தை ஷானு நேற்று மாலை வீட்டில் சடலமாக கிடந்திருக்கிறான். இதனையடுத்து அக்கம்பக்கத்தினரிடம் கூறியிருக்கிறார் ஆஸி. ஆனால் அவரது நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால் உடனடியாக போலிஸுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

இதையடுத்து உடனே விரைந்து வந்த போலிஸார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். உடற்கூராய்வு அறிக்கைப்படி ஷானுவின் கழுத்தை நெரித்துக் கொன்றது தெரிய வந்திருக்கிறது.

ஆகவே ஆஸியின் மீதான அண்டைவீட்டாரின் சந்தேகம் உறுதியானதால் அப்பெண்ணிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதன்படி, ஷமீரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த ஆஸிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் நீண்ட நாட்களாக தொடர்பு இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில் காதலனுடன் வாழ குழந்தை இடையூறாக இருப்பதால் கொலை செய்துவிட்டு முதலைக் கண்ணீர் விட்டது அம்பலமாகியிருக்கிறது.

பின்னர் ஆஸியை கைது செய்த போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Also Read: காதலுக்கு இடையூறு.. சேமியா உப்புமாவில் விஷம் கலந்து கொடுத்து பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்!