India

தொப்பென மயங்கிய 7 மாணவிகள்.. தோப்புக்கரணம் போட்டதால் வந்த விபரீதம்.. ஒடிசா ஆசிரியர் மீது பாய்ந்த விசாரணை!

தண்டனையாக 100 தோப்புக்கரணம் போடச் சொல்லி ஆசிரியர் கூறியதால் அரசு பள்ளியில் 7 மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நடந்தேறியிருக்கிறது.

ஒடிசாவின் பொலங்கிர் மாவட்டத்தில் உள்ள பட்நாகர் பகுதியில் இயங்கி வருகிறது அரசு பாபுஜி உயர்நிலை பள்ளி. இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர்தான் பிகாஷ் தருவ்.

நேற்று பள்ளிக்கு 7 மாணவிகள் தாமதமாக வந்ததால் பிகாஷ் அந்த மாணவிகளை 100 முறை தோப்புக்கரணம் போடச் சொல்லி தண்டனை வழங்கியிருக்கிறார்.

பாதியளவுக்கு மேல் தோப்புக்கரணமிட்ட அந்த மாணவிகளால் முடியாமல் போயிருக்கிறது. இருப்பினும் தொய்வில்லாமல் தோப்புக்கரணம் இட வேண்டும் என பிகாஷ் கண்டிப்புடன் கூறியிருக்கிறார்.

தண்டனையை தொடர்ந்து செய்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென அந்த மாணவிகள் மயங்கி விழுந்திருக்கிறார்கள். உடனடியாக பட்நாகர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அந்த மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

மருத்துவமனைக்கு செல்லும் போதே மிகவும் மாணவிகளின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்திருக்கிறது. முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இதனிடையே இந்த விவகாரம் பூதாகரமானதால் மாணவிகளுக்கு தண்டனை வழங்கிய ஆசிரியர் பிகாஷிடம் விசாரணை மேற்கொள்ள அம்மாநில அமைச்சர் சமிர் ரஞ்சன்தாஷ் உத்தரவிட்டுள்ளார்.

Also Read: சுருண்டு கிடந்த மகளை கண்டு பரிதவித்துப்போன பெற்றோர்: முறைமாமனால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!