India

தொடரும் செல்ஃபி மரணங்கள்.. ரயில் மீது ஏறி selfie எடுக்க முயன்ற பள்ளி மாணவனுக்கு நேர்ந்த துயரம்!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் சுஹைல் மன்சூரி. பள்ளி மாணவரான இவர் தனது நண்பர்கள் சிலருடன் இன்று சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது திடீரென மன்சூரி அங்கிருந்த ரயில் என்ஜின் மீது ஏறியுள்ளார்.

இதைப்பார்த்த பொதுமக்கள் அவரை கீழே இறங்கி வருமாறு எச்சரித்துள்ளனர். ஆனால் அதைக் கேட்காமல் அவர் என்ஜின் மீது ஏறி தனது செல்போனில் இருந்து செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அந்நேரம் தவறுதலாக அவரது கை ரயிலுக்கு மேற்பகுதியில் இருந்த உயர் அழுத்த மின் கம்பி மீது பட்டதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதனால் ஆவேசமடைந்த அவரது நண்பர்கள் ரயில் நிலையத்தை அடித்து நொறுக்கியுள்ளனர். பிறகு அங்கு வந்த ரயில்வே போலிஸார் அவர்களை அங்கிருந்து வெளியே அனுப்பியுள்ளனர். பின்னர் மன்சூரி உடலை மீட்ட போலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

செங்கல்பட்டில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து இன்ஸ்டாகிரம் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த 3 மாணவர்கள் மீது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அடங்குவதற்குள் மத்திய பிரதேசத்தில் ரயில் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயற்சித்த பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த இரண்டு சம்பவங்களும் அபாயகரமான செல்ஃபியின் ஆபத்தை மீண்டும் உணர்த்துவதாக இருக்கிறது என சமூக ஆவர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read: தலைக்கேறிய லைக்ஸ் மோகம்.. செல்ஃபி எடுத்ததால் வந்த வினை : ரயிலில் அடிபட்டு 3 இளைஞர்கள் பரிதாப பலி !