India

”ஊரடங்கை கைவிடலாம்.. ஆனால்..,” - மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு விடுத்த திடீர் கடிதம்!

2019ம் ஆண்டு சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் 2 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது. இப்படி இருக்கையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு 2 ஆண்டுகளாகியும் தொடர்ந்து வருகிறது.

முதல் இரண்டு மூன்று என அடுத்தடுத்த அலைகள் தாக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக நாடு மீண்டு வருவது அண்மை நாட்களாக வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதே சாட்சியாக உள்ளது.

ஏனெனில், கொரோனா பரவல் தொடங்கப்பட்டதில் இருந்தே நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு முறையாக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக கொரொனா தாக்குதல் தற்போது குறிப்பிடத்தக்க வகையில் குறைந்திருக்கிறது.

இந்த நிலையில், ஒன்றிய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. அதில், கொரோனா பரவலை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக கைவிடலாம் எனக் கூறியுள்ளது.

இருப்பினும், உலகளவில் கொரோனா முழுவதுமாக ஒழிந்துவிடவில்லை என்பதால் அதனிடம் இருந்து தற்காத்துக்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டியதும் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக நாட்டில் 181.56 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: 15 வருஷமா இதுதான் இந்த டெல்லி கும்பலின் வேலை.. நம்பி ஏமாறாதீங்க மக்களே.. அரியலூரில் நடந்தது என்ன?