India

இறந்தவர் வங்கிக் கணக்கிலிருந்த ரூ.1.29 கோடி ‘அபேஸ்’ : வங்கி ஊழியரின் ID-யை பயன்படுத்தி திருடிய கும்பல்!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் ஹிரேந்திர குமார். இவருக்கு கொல்கத்தாவில் உள்ள வங்கிக் கிளை ஒன்றில் கணக்கு உள்ளது. இந்நிலையில் அவர் கடந்த 2014ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரது பணத்தை வங்கியில் இருந்து எடுக்க உறவினர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால் அவர் சேமித்து வைத்திருந்த பணம் முழுவதும் அவரது கணக்கிலேயே பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் திடீரென அவரது வங்கிக் கணக்கு மும்பையில் உள்ள ஒரு வங்கிக்கு மாற்றப்பட்டிருப்பதைப் பார்த்து வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவரது வங்கி கணக்கில் இருந்து நெட் பேங்க் மூலம் ரூ.1.29 கோடியை மர்ம நபர்கள் திருடியதும் தெரியவந்தது.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட வங்கி நிர்வாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தது. பின்னர் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, வங்கியில் துப்பரவுப் பணியில் ஈடுபட்ட தில்ஷத்கான், அல்தமேஷ் ஆகிய இரண்டு பேர்தான் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் இவர்கள் வங்கி ஊழியர் ஒருவரின் ஐடியைப் பயண்படுத்தி இறந்தவரின் கணக்கில் இருந்து பணத்தை 10 பேரின் வங்கிக்கு கொஞ்சம், கொஞ்சமாக ரூ.1.29 கோடி வரை மாற்றியுள்ளனர். பணத்தை முழுமையாக மாற்றிய பிறகு அவர்கள் வேலையை விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது தலைமறைவாக உள்ள இரண்டு பேரையும் பிடிக்க போலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர். இறந்துபோன வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.29 கோடி திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 30 ஆண்டுகள் கழித்து ஆசிரியரை பழிவாங்கிய மாணவன்.. 101 முறை கத்தியால் குத்தி கொடூர கொலை : ‘பகீர்’ காரணம்!