India

ரஷ்ய அதிபருடனான தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இதை செய்யவேண்டும்.. பிரதமருக்கு திமுக MP வைத்த கோரிக்கை!

திராவிட முன்னேற்றக் கழகப்பொருளாளரும், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு அவர்கள், மக்களவையில், போர் நடைபெறும் உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டுக்கொண்டு வருவது தொடர்பான கேள்வியின் மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பல்வேறு துணைக்கேள்விகளை எழுப்பினார்.

அப்போது இந்திய மாணவர்களை, குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் அனைவரையும் பாதுகாப்பாகத் திரும்ப அழைத்து வரசிறப்பு ஏற்பாடுகளைச் செய்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக டி.ஆர்.பாலு மக்களவையில் நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு, மாணவர்கள் பத்திரமாக நாடு திரும்பினாலும் மற்றொரு முக்கியமான பிரச்சினையான, இடையே தடைபட்டு நின்றுள்ள தங்கள் மருத்துவக் கல்வியைத் தொடர்வது எப்படி என்பதுதான். ரஷ்யாவில் தரப்படும் மருத்துவக் கல்விக்கான பாடத்திட்டமும், உக்ரைன் மருத்துவக் கல்வி பாடத்திட்டமும் ஒன்றாக இருப்பதால் நம் மாணவர்கள், தடைப்பட்டுள்ள தங்கள் மருத்துவப் படிப்பினை ரஷ்யாவில் தொடரமுடியும். எனவே, பிரதமர் மோடி அவர்கள் ரஷ்ய அதிபர் புதின் அவர்களுடனான தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உக்ரைனிலிருந்து மருத்துவப் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு தாயகம் திரும்பிய தமிழக மருத்துவ மாணவர்கள் ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வியைத் தொடர்ந்து மேற்கொள்ள உதவி செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.

Also Read: தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வியைச் சிதைக்கத் துடிக்கும் ஒன்றிய அரசு.. முரசொலி தலையங்கம்!