India

“பேசுவது மட்டும் One Nation.. தெற்கு ரயில்வேக்கு ரூ.59 கோடி, வடக்கிற்கு 13,200 கோடி” : கனிமொழி MP ஆவேசம்!

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என தி.மு.க எம்.பி கனிமொழி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1-ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. இது, வரும் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று மக்களவையில் ரயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இன்று மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி கனிமொழி, “மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். கொரோனா காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக இருந்த கோச்கள் நீக்கப்பட்டது.

தெற்கு ரயில்வேக்கு ரூ.59 கோடி மட்டும், வடக்கு ரயில்வேக்கு ரூ.13,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. One Nation என்று எப்போதும் பேசும் நீங்கள் ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் வடக்கு, தெற்கு பாகுபாடு பார்க்கக்கூடாது.

தென்னிந்திய ரெயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட வடக்கு ரெயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் தென்னிந்திய ரெயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த தொகை வெறும் ரூ.308 கோடி மட்டுமே” என ஆவேசமாகப் பேசினார்.

மேலும், "லாபத்தில் இயங்கும் ரயில்களை, ஒன்றிய அரசு தனியாருக்குத் தாரைவார்க்கிறது. நஷ்டத்தில் இயங்கும் ரயில்களை மட்டுமே ஒன்றிய அரசு இயக்குகிறது.

ரயில்வே துறையில் தென்னிந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகள் திட்டமிட்டு மறுக்கப்படுகின்றன. மொழி தெரியாத பணியாளர்களால் மக்களின் உயிருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது” என கனிமொழி எம்.பி மக்களவையில் பேசினார்.

Also Read: “நீட் விலக்கு மசோதா” : ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி - முதல்வர் சந்திப்பின்போது நடந்தது என்ன?