India
MLA பதவியை ராஜினாமா செய்யவிருக்கும் அகிலேஷ்... காரணம் என்ன?
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற அகிலேஷ், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேச தேர்தலில், பா.ஜ.க கூட்டணி 273 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பா.ஜ.க மட்டும் 255 தொகுதிகளைக் கைப்பற்றியது. இது கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் பெற்ற தொகுதிகளை விட குறைவு.
கடந்த தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வென்ற சமாஜ்வாதி கட்சி, இந்தத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 125 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. சமாஜ்வாதி மட்டும் தனியாக 111 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “உத்தர பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு அதிக எம்.எல்.ஏக்களையும், அதிக வாக்குகளையும் அளித்த மக்களுக்கு நன்றி. பா.ஜ.கவின் வெற்றி எண்ணிக்கையை குறைக்க முடியும் என்பதை சமாஜ்வாதி நிரூபித்துள்ளது’’ எனத் தெரிவித்தார்.
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட அகிலேஷ், கர்ஹால் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பா.ஜ.க வேட்பாளரை அகிலேஷ் 67,504 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
இதற்கு முன் அவர் முதல்வராக இருந்தபோதிலும் மேல்சபை உறுப்பினராக இருந்தார். இந்நிலையில், இந்தத் தேர்தலில்தான் முதல்முறையாக நேரடியாகப் போட்டியிட்டு வென்றார்.
தற்போது அசம்கர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருக்கும் அகிலேஷ் இரண்டில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும் எனும் நிலையில் அகிலேஷ் மக்களவை எம்.பி.யாக நீடிக்கவே விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்ஹால் எம்.எல்.ஏ பதவியை அகிலேஷ் ராஜினாமா செய்யும் அறிவிப்பு கட்சி சார்பில் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகக்கூடும் என்றும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
2002, 2007, 2012 மற்றும் 2017 சட்டப்பேரவைத் தேர்தல்களில் கர்ஹால் தொகுதியில் இருந்து சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் சோபரன் சிங் யாதவ் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அவர் அகிலேஷுக்காக தொகுதியை விட்டுக் கொடுத்தார். இடைத்தேர்தல் நடந்தால் சோபரன் சிங்கே வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
“கவர்ச்சியால் வெற்றிபெறாமல், வேறு எதைவைத்து வெற்றிபெற்றீர்கள்?” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பதிலடி!
-
“தமிழ்நாட்டில் என்னவானாலும் ‘விஜய்’ விளக்கமளிக்கப் போவதில்லை!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
-
டெல்லியில் நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் தி.மு.க பங்கேற்காது! : தலைமைக் கழகம் அறிவிப்பு!
-
தமிழ்நாட்டிற்கான 152 மருத்துவ இடங்களை கைவிட்டுவிடக்கூடாது! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தல்!
-
“திருச்சியில் கொடூரம்.. மது கொடுத்து சிறுமிக்கு கூட்டு பா*யல் வன்கொடுமை.. சாலையில் வீசிச் சென்ற அவலம்”