India

தோற்றாலும் இது ‘கெத்தான வெற்றி’.. பாஜகவின் வாக்கு சதவீதத்தை குறைத்த சமாஜ்வாதி: அகிலேஷின் மாஸ்டர் பிளான்!

உத்தர பிரதேசத்தில் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி முதல் கடந்த 7ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்து மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து வெற்றி விவரங்கள் அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பா.ஜ.கவிற்கு கடும் போட்டியாக இருந்த சமாஜ்வாதி கட்சி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதில் 403 தொகுதிகளில் 273 இடங்களை பிடித்து பா.ஜ.க முதல் இடத்திலும் 125 இடங்களை பிடித்து சமாஜ்வாதி 2ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.

மீண்டும் ஆட்சியை பிடித்த பா.ஜ.க இந்த முறை குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுல்லாது, கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 322 தொகுதியில் வெற்றி பெற்ற பா.ஜ.கவால் இந்தாண்டு 273 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப் பெற முடிந்தது.

அதுபோல், 2017லில் 47 இடங்களைப் பிடித்த அகிலேஷின் சமாஜ்வாதி கட்சி இந்த முறை 125 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் சமாஜ்வாதி கட்சியின் வாக்கு சதவீதம் 32.06 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த முறை கிடைத்த வெற்றி என்பது, பா.ஜ.கவின் இடங்களைக் குறைக்க முடியும் என்று காட்டியிருக்கிறோம் என அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அகிலேஷ் வெளியிட்ட பதிவில், “கடந்த தேர்தலைவிட, வாக்கு சதவிகிதம் ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. வெற்றி இடங்கள் 2 மடங்கு அதிகமாகியுள்ளது. உத்தர பிரதேச மக்களுக்கு எங்களின் இதயப்பூர்வமான நன்றிகள். இதன் மூலம் பா.ஜ.கவின் இடங்களை குறைக்க முடியும் என்று காட்டியிருக்கிறோம். பா.ஜ.கவின் இடங்களை குறைப்பது தொடரும். பொதுமக்களின் விருப்பத்திற்கான போராட்டம் வெற்றி பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: தையல் பள்ளி பேரில் பாலியல் தொழில்; 16 வயது சிறுமியை வன்கொடுமை செய்த கயவர்கள்: 6 பேர் சிக்கியது எப்படி?