India
பேரறிவாளனுக்கு ஜாமின்... ஆளுநரின் செயலால் அதிருப்தி - உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கைதிகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது.
இடையிடையே பரோலில் அவர்களில் சிலர் வெளியே வந்து சென்றனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பதவி ஏற்றதும், பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது. இந்த பரோல் 9 மாதங்களை கடந்து தொடர்ந்து வருகிறது.
பரோலுக்கு சில கட்டுப்பாடுகள் இருப்பதால், சுதந்திரமாக வெளியே செல்ல முடியவில்லை. அதனால் தனக்கு ஜாமின் வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
அவரது மனுமீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்க ஒன்றிய அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்க இயலாது என ஒன்றிய அரசு கூறியுள்ளது.
இந்த விசாரணையின்போது, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் செய்த கால தாமதத்தை ஏற்க முடியாது. பேரறிவாளன் உள்ள்ளிட்டோரை விடுதலை செய்யவேண்டும் என்பது மாநில அமைச்சரவையின் முடிவு என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். பரோலில் வெளியே வந்தபோது அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், அவருக்கு ஜாமின் வழங்கியுள்ளனர்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் தலைமையிலான பெஞ்ச், அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் கைதிகள் தண்டனை குறைப்பு தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்கிற போது அதே அரசியல் சாசனத்தின் 432-வது பிரிவின் கீழ் கைதிகள் தண்டனை குறைப்பு அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டும் எப்படி கிடைக்கும் எனவும் கேள்விகள் எழுப்பினர்.
மேலும், கைதிகள் விடுதலை, தண்டனை குறைப்பு தொடர்பாக முடிவெடுக்க அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர்.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!