India

காதலனுடன் செல்வதற்காக இப்படியா? கணவனை போதை வழக்கில் சிக்க வைத்த பெண் கவுன்சிலர்; கேரளாவில் மூவர் கைது!

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டன் மேடு பகுதியை சேர்ந்தவர் சுனில் வர்கீஸ் (38). இவரது மனைவி சவுமியா (33). இவர் வண்டன்மேடு பஞ்சாயத்து கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்து வரும் வினோத் (43) என்பவருடன் சவும்யாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது. இதனால் வினோத் துபாயிலிருந்து அடிக்கடி ஊருக்கு வந்து சவுமியாவை சந்தித்து வந்தார். 

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். இதற்கு சுனில் வர்கீஸ் தடையாக இருப்பார் என்பதால் அவரைக் கொல்ல முடிவு செய்தனர். ஆனால் போலிஸில் சிக்கிவிடுவோம் என பயந்து அந்த திட்டத்தை பின்னர் அவர்கள் கைவிட்டனர். இதன் பிறகு சுனிலை போதைப் பொருள் வழக்கில் சிக்க வைக்கலாம் என இருவரும் தீர்மானித்தனர்.

இதையடுத்து வினோத் தன்னுடைய நண்பரான ஷாநவாஸ் (39) என்பவரை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார். அவர் கொச்சியில் உள்ள ஒரு போதைப் பொருள் கும்பலிடம் ரூ. 45,000க்கு போதைப்பொருள் வாங்கி வினோதிடம் கொடுத்துள்ளார். வினோத் இதை கொல்லத்தை சேர்ந்த ஷெபின்ஷா (24) மூலம் சவுமியாவுக்கு கொடுத்து அனுப்பியுள்ளார். பின்னர் சவுமியா அந்த போதைப் பொருளை தனது கணவனின் பைக்கில் மறைத்து வைத்து விட்டு வினோத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். 

இதனை தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன் வினோத் தன்னுடைய நண்பர் மூலம், சுனில் பைக்கில் போதைப் பொருள் கடத்துவதாக இடுக்கி மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளார். இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படி எஸ்.பி கருப்பசாமி வண்டன்மேடு போலிஸுக்கு உத்தரவிட்டார். 

இதையடுத்து வண்டன் மேடு போலிஸார் சுனிலின் பைக்கை சோதனையிட்ட போது போதைப் பொருள் சிக்கியது. இதையடுத்து அவரை போலிஸார் கைது செய்தனர். ஆனால் விசாரணையில் சுனில் அப்பாவி என்றும், சவுமியாவும் அவரது காதலன் வினோத்தின் திட்டம்தான் என தெரிய வந்தது.

ஆகவே சவுமியாவுக்கு உடந்தையாக இருந்த ஷெபின்ஷா, ஷாநவாஸையும் போலிஸார் கைது செய்ததோடு வெளிநாட்டில் உள்ள வினோத்தை கைது செய்யவும் போலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: ‘இனி மீண்டும் தொடர்ந்தால்’.. prankshow வீடியோ வெளியிடும் youtube சேனலுக்கு காவல்துறை கடும் எச்சரிக்கை !