India

இளம் பெண் கொடூரக் கொலை.. மகனையே போலிஸில் ஆதாரத்துடன் காட்டிக் கொடுத்த தந்தை: நடந்தது என்ன?

மும்பை மிஸ்குய்ட்டா பகுதியைச் சேர்ந்தவர் கேரல். இளம் பெண்ணான இவர் கடந்த மாதம் 24ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அந்த பெண்ணை தேடிவந்த நிலையில் கடந்த 3ம் தேதி பல்கார் நகரில் உள்ள புதர் ஒன்றில் அவரை சடலமாக மீட்டனர். பின்னர் இந்த மர்ம மரணம் குறித்து போலிஸார் விசாரணை செய்தபோது, ஜீக்கோ என்ற நண்பருடன்தான் கேரல் கடைசியாக இருந்ததை போலிஸார் கண்டுபிடித்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியபோது கேரல் மரணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார். ஆனால் ஜீக்கோவின் தந்தைக்கு மகன் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவரது மடிக்கணினியைச் சோதனை செய்தபோது சில ஆதாரங்கள் அவருக்குக் கிடைத்துள்ளது. இதை அவர் போலிஸில் ஒப்படைத்துள்ளார்.

இந்த ஆதாரங்களைக் கொண்டு ஜீக்கோவிடம் போலிஸார் மீண்டும் விசாரணை நடத்தினர். அப்போதுதான் கேரலை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். திருமணம் செய்து கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்ததால் கேரலை கொலை செய்ததாக ஜீக்கோ வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற மகனையே போலிஸாரிடம் அவரது தந்தை காட்டிக்கொடுத்த சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை.. அதிரடி உத்தரவு: எங்கு தெரியுமா?