India

”கம்மி விலைக்கு தங்கம் விக்கிறோம்” - நம்பி ஏமாந்து ரூ.22 லட்சத்தை பறிகொடுத்த நபர்: சித்தூரில் நூதன கொள்ளை

தங்கம் வாங்க வந்த நபரை கடத்தி அவரிடம் இருந்த 22 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த 5 பேர் கொண்ட மோசடி கும்பல் கைது செய்யப்பட்டிருக்கிறது.

சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், சுரேந்திரா, சந்திரா, வெங்கட்ரமணா, ராஜசேகர் ஆகிய ஐவரும் சேர்ந்து ஃபேஸ்புக் பக்கத்தில் குறைந்த விலையில் தங்கம் கிடைக்கும் என விளம்பரம் செய்திருந்தார்கள்.

அதனைக்கண்ட கடப்பா ராயச்சோட்டியைச் சேர்ந்த உசேன் என்பவர் அந்த ஐவரை தொடர்பு கொண்டு ஒரு கிலோ தங்கம் வேண்டும் என கேட்டிருக்கிறார். அதற்கு அந்த கும்பல் ரூ.38 லட்சம் ஆகும் என கூறியிருக்கிறது.

இதனையடுத்து, முதலில் ரூ.22 லட்சத்தை எடுத்துக்கொண்டு உசேன் அவரது நண்பர் சைஃப் உடன் திருப்பதிக்கு சென்றிருக்கிறார்.

அங்கு சென்றவர்களிடம் தங்கக்கட்டியை காண்பித்ததோடு பீளேரில் உள்ள எல்லமந்தா வளைவுக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். இதனையடுத்து தனியாக பீளேருக்கு சென்ற உசேனை தங்கத்தை எடுத்து வருவதற்காக வேறொரு இடத்துக்குச் செல்லவேண்டும் எனக் கூறி அவர்கள் வந்த சொகுசு காரில் அழைத்து சென்றிருக்கிறார்கள்.

அப்போது திடீரென காரை நிறுத்திய அந்த கும்பல் உசேனிடம் இருந்து அவர் வைத்திருந்த 22 லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு அவரை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பித்திருக்கிறார்கள்.

இதனையடுத்து பீளேர் போலிஸாரிடம் சம்பவம் குறித்து உசேன் புகாரளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை முடுக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, பீளேரில் உள்ள தொழிற்பூங்காவில் தலைமறைவாக இருந்த மோசடி கும்பலை கைது செய்த போலிஸார் அவர்களிடம் இருந்த 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயையும், 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

Also Read: ”OLXல் விற்று GPS-ஐ வைத்து காரை திருடி சுகபோக வாழ்வு” -பெங்களூரில் சிக்கிய ஹை-டெக் கேரள திருட்டு கும்பல்!