India

ஊக்கினை விழுங்கிய 8 மாத குழந்தைக்கு புது வாழ்வை கொடுத்த திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள்!

கேரளாவின் மண்ணுத்தி பகுதியில் உள்ள வல்லச்சிரவீட்டில் பகுதியைச் சேர்ந்தவர்கள் வினோத், தீபா தம்பதி. அவர்களது 8 மாத ஆண் குழந்தையை உடல்நலக் குறைவு காரணமாக திருச்சூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜனவரி 19ம் தேதி அனுமதித்தனர்.

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதே குழந்தை பேச்சு மூச்சின்றி இருந்திருக்கிறான். இதனால் செயற்கை சுவாசக் கருவி கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறது.

அப்போது குழந்தையின் மூளையில் சீழ் இருப்பதும், கோவிட் தொற்றும் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதோடு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மூலம் மூளையில் இருந்த சீழ்-ம் அகற்றப்பட்டிருக்கிறது.

இருப்பினும் குழந்தையின் உடல்நிலையின் முன்னேற்றம் காணப்படாததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் உணவுக்குழாயை ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார்கள். அப்போது, உணவுக் குழாயில் Safety pin என அழைக்கக் கூடிய ஊக்கு சிக்கியிருந்திருப்பது தெரியவந்திருக்கிறது.

பின்னர் உணவுக்குழாயில் உள்ள ஊக்கினை அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தியதை அடுத்து குழந்தைகள் நல வார்டுக்கு மாற்றப்பட்டிருக்கிறது அந்த சிசு.

பத்து நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்புக்கு பிறகு குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். நரம்பியல் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்கள் பலர் இணைந்து

8 மாத குழந்தையை உயிர் பிழைக்க வைத்ததற்கு திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவக் குழுவுக்கு பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.

Also Read: ”அந்த 20 நொடிகள்தான்” : மகனின் கல்யாணத்தின் போது இறந்த தாய் - இரங்கல் கூட்டமான திருமண கொண்டாட்டம்!