India

சின்ன இடப்பிரச்னை; அடிதடியில் இறங்கிய அக்கம்பக்கத்தினர்; புதுச்சேரி பாகூரில் பரபரப்பு!

புதுச்சேரி பாகூர் தண்ணீர் தொட்டி வீதியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (50), இவர் தனது மகன் பிரியதர்ஷன், மகள் பிரியதர்ஷினி உடன் வசித்து வருகிறார்.

இவரது பக்கத்து வீட்டில் உறவினர்களான செல்வி-சுப்பிரமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த இரு குடும்பத்தினருக்கு இடையே வீட்டு மனை பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆதிலட்சுமியின் மகன் நேற்று காலை வீட்டின் அருகே இருக்கும் இரு குடும்பத்திற்கும் சொந்தமான காலி மனையை செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.

இதனைக்கண்ட செல்வி மற்றும் அவரது கணவர் சுப்பிரமணி, ஆதிலட்சுமியின் மகனை ஆபாசமாக திட்டியுள்ளனர். பதிலுக்கு ஆதிலட்சுமியும் அவரது மகளும், சுப்பிரமணி தம்பதியினரை திட்டியதாக தெரிகிறது.

இதில் ஆத்திரமடைந்த தம்பதியினர், தாய் ஆதிலட்சுமி மற்றும் மகள் பிரியதர்ஷினியை கட்டையால் தாக்கி உள்ளனர். இதனை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

அது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாக வருகிறது. இது குறித்து பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: சிகரெட்டை பிடுங்கி வீசியதால் ஆத்திரம்; பெண்ணின் மூக்கை உடைத்த வங்கி ஊழியர் - குருகிராமில் பயங்கரம்!