India

2 ஏக்கர் நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கி, சமையல் வேலைக்கு போகும் மூதாட்டி.. நெகிழ்ந்த கிராம மக்கள்!

கர்நாடகா மாநிலம் குனிகெரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹுச்சம்மா சௌத்ரி. மூதாட்டியான அவரது கணவர் பசப்பா சௌத்ரி 30 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து இவர்களுக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தார்.

இந்நிலையில் கிராமத்தில் இருக்கும் சிறுவர்களுக்காகப் பள்ளி கட்டுவதற்கு இடம் தேடப்பட்டு வந்தது. இதனை அறிந்த மூதாட்டி ஹுச்சம்மா உடனே அவர்களைச் சந்தித்து ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கினார். பின்னர் பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்காக மீதி இருந்த ஒரு ஏக்கர் நிலத்தையும் வழங்கினார்.

பள்ளிக்காக நிலத்தை வழங்கி விட்டதால், அந்தப் பள்ளியில் தற்போது மதிய உணவு சமைக்கும் வேலையைச் செய்து வருகிறார். மேலும் பள்ளி விடுமுறை நாட்களில் விவசாய நிலங்களில் வேலைபார்த்து தனது தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்.

இது குறித்து மூதாட்டி ஹூச்சம்மா கூறுகையில், "எனக்குக் குழந்தை இல்லை. கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் என்னை ஆச்சி என அழைக்கிறார்கள். இதனால் அவர்களுக்காகவே எனது நிலத்தைக் கொடுத்துவிட்டேன். பணத்தை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன்? இந்த குழந்தைகள் எப்போதும் என்னை நினைவில் வைத்துக்கொள்வார்கள். அது போதும்" எனத் தெரிவித்துள்ளார்.

மூதாட்டி தன்னிடம் இருந்த 2 ஏக்கர் நிலத்தையும் பள்ளிக்குத் தானமாகக் கொடுத்துவிட்டு அதே பள்ளியில் மதிய உணவு சமைப்பவராக இருந்து வருவது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “பாக்கெட்ல 10 ரூபா இருக்கா? கார் வாங்க வந்தாராம்” : கிண்டல் செய்த சேல்ஸ்மேன்.. ஷோரூமை மிரளவைத்த விவசாயி!