India

“மேட்ரிமோனி மூலம் 35 பெண்களிடம் மோசடி செய்த ஆசாமி” : மாறுவேடத்தில் சென்று மடக்கிய போலிஸ் - நடந்தது என்ன?

மும்பை காஞ்சூர் மார்க் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமண மேட்ரிமோனி தளத்தில் பதிவு செய்திருந்தார். இதைப் பார்த்த விஷால் சவ்ஹான் என்பவர் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதையடுத்து இருவரும் செல்போனில் பேசிவந்துள்ளனர். அப்போது அந்த பெண்ணிடம் விஷால் திருமணம் செய்து கொள்வதாகத் தெரிவித்துள்ளார். அவரின் பேச்சை அந்தப் பெண் உறுதியாக நம்பியுள்ளார்.

இதைப் பயன்படுத்தி விஷால் அந்த பெண்ணிடம் ரூ.2.5 லட்சம் தேவைப்படுவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணும் விஷால் கூறிய வங்கிக் கணக்கிற்கு ரூ.2.5 லட்சம் பணம் அனுப்பிவைத்துள்ளார். இதையடுத்து அவர் விஷாலுக்கு தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

பின்னர், பல முறை முயற்சி செய்தும் அந்த பெண்ணால் விஷாலைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. பிறகு தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் இது தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் இதேபோன்று பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி ரூ. 17 லட்சம் மோசடி செய்ததாக மற்றொரு பெண்ணும் புகார் அளித்தார்.

பின்னர் இந்த இரண்டு வழக்குகளையும் விசாரித்தபோது ஒரே நபர்தான் இவர்கள் இருவரையும் ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து இவர்களை ஏமாற்றிய விஷால் தானே பகுதியில் இருப்பதை போலிஸார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து டெலிவரி பாயாக மாறுவேடத்தில் சென்று விஷாலை அவரது வீட்டிலேயே கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த பெண்களைப் போலவே 35க்கும் மேற்பட்ட பெண்களிடம் பண மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

இந்த மோசடிகளுக்காக திருமண மேட்ரிமோனி தளங்களை பயன்படுத்தி அதன் மூலம் பெண்களிடம் பேசி திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்து அவர்களிடம் பணம் பறித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Also Read: “கட்சிக்காக பணத்தை வாங்கிட்டு ஏமாத்தீட்டாங்க” - பாஜகவிலிருந்து விலகியவர் கண்ணீர் மல்க பேட்டி!