India

₹7 லட்சம் செலவில் நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்.. உரிமையாளர் உட்பட 3 பேர் கைது : நடந்தது என்ன?

குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் சிராக் படேல், உர்விஷ் படேல். சகோதரர்களான இவர்கள் இருவரும் 'அப்பி' என்ற நாயை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் சகோதரர்கள் தங்களது செல்ல நாய்க்குப் பிறந்தநாள் கொண்டாட முடிவு செய்துள்ளனர். பின்னர் நண்பர்கள், உறவினர்கள் என பலரையும் நாயின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர்.

இதையடுத்து நாயின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடியுள்ளார். இதற்காக வாடகைக்குப் பெரிதாக இடம் எடுத்து, அதில் கூடாரம் அமைத்து, விதவிதமாக 'அப்பி' நாயின் புகைப்படத்தைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதைப் பார்த்து பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற எல்லோரும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

மேலும், இசை நிகழ்ச்சிகள் மற்றும் விருந்து ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. நாயின் பிறந்த நாளை ஆட்டம் பாட்டத்துடன் அனைவரும் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர். இந்த பிறந்தநாள் விழாவிற்கு மட்டும் ரூ. 7 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்து சகோதரர்கள் சிராக் படேல், உர்விஷ் மற்றும் அவரது நண்பர் வ்யேஷ் மெஹரியா ஆகிய மூன்று பேரையும் போலிஸார் கைது செய்தனர்.

Also Read: ”இனி டீச்சர்னுதான் கூப்பிடனும்; No சார்/மேடம்” - பாலின சமத்துவத்துக்கான அடுத்த படி - கேரள பள்ளி அசத்தல்!