India

“டெல்டாவை போல் தீவிரமடையும் ஒமைக்ரான்” : மாநிலங்களை எச்சரித்த ஒன்றிய அரசு!

இந்தியாவில் கொரோனா தொற்று வெகுவாகக் குறைந்து வந்த நிலையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபான ஒமைக்ரான் தொற்றும் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது.

இதுவரை இந்தியாவில் 1,270 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 16,764 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 450 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. அடுத்தபடியாக டெல்லியில் 320 பேருக்குத் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 23 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது.

மேலும் மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் தொற்றிலிருந்து குணமடைந்தவர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டெல்டா வைரஸை போல் ஒமைக்ரான் தொற்றும் பரவும் நிலையை எட்டிவிட்டதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் மீண்டும் முழுநேர ஊரடங்கு அறிவிக்கப்படுமோ என மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ’வீட்டு தனிமைக்கு அனுமதியில்லை’ - ஒமைக்ரான் பாதிப்பால் தனியார் மருத்துவமனைகளுக்கு முக்கிய ஆணை பிறப்பிப்பு