India

ATM இயந்திரத்தை வெடி வைத்து தகர்த்து ரூ.17 லட்சம் கொள்ளை.. CCTV காட்சியை வைத்து கொள்ளையரை தேடும் போலிஸ்!

மகாராஷ்டிராவில் ஏ.டி.எம் மையத்திற்குள் நுழைந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த ஏ.டி.எம் எந்திரத்தை ஜெலட்டின் குச்சிகளை கொண்டு வெடிவைத்து தகர்த்து ரூ. 17 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் சக்கான் என்ற பகுதியில் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் உள்ளது.

இந்த ஏ.டி.எம் மையத்தில் நேற்று நள்ளிரவு புகுந்த கொள்ளையர்கள் ஏ.டி.எம் இயந்தியத்தை உடைக்க முயற்சித்துள்ளனர். உடைக்க முடியாததால், ஜெலட்டின் குச்சிகளைக் கொண்டு வெடி வைத்து தகர்த்து அதில் வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த ஏ.டி.எம் மையம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருந்ததாலும், சம்பவம் நடத்த நேரம் நள்ளிரவு என்பதாலும் அருகில் இருந்த யாருக்கும் வெடிச்சத்தம் கேட்கவில்லை.

காலையில் பணம் எடுக்க வந்த ஒருவர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலிஸார், விரைந்து வந்து கொள்ளையர்களின் கைரேகை மற்றும் உடைக்கப்பட்ட இயந்திரத்தின் பாகங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.

ஏ.டி.எம் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா உள்பட அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து போலிஸ் அதிகாரிகள் கூறுகையில், “இந்த ஏ.டி.எம் கொள்ளை சம்பவத்தில் மூன்று பேர் ஈடுபட்டிருக்கலாம், இயந்திரத்தில் சுமார் ரூ. 17 லட்சம் ரொக்கப் பணம் வைக்கப்பட்டிருந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளையர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, கடந்த ஜூலை மாதம் புனேவின் கிராமப்பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம் எந்திரம் வெடிவைத்து தகர்க்கப்பட்டு அதில் இருந்த ரூ.28 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read: உதவி செய்வதாக ATM-களில் திருடியே, கடனை அடைத்து புதிதாக வீடும் கட்டிய ‘பலே’ திருடன் - ஆந்திராவில் கைது!