India

”கும்பல் வன்முறையில் ஈடுபட்டால் ஆயுள் சிறை” - ஜார்க்கண்ட் அரசு அதிரடி; சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்!

ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலங்களை அடுத்து ஜார்க்கண்ட் மாநில அரசும் கும்பல் வன்முறைக்கு எதிரான சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் கடைசிநாள் அமர்வு நேற்று நடைபெற்றது. அப்போது, அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ஆலம்கீர் ஆலம் வன்முறை மற்றும் கும்பல் கொலை தடுப்பு 2021 என்ற மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய அமைச்சர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அரசியல் உரிமைகளை பாதுகாக்கவும், கும்பல் வன்முறையை தடுக்கவும் இந்த மசோதா வழிவகைச் செய்யும் எனக் கூறினார்.

மேலும், கும்பல் வன்முறையில் ஈடுபட்டு குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால் அந்த நபருக்கு ஆயுள் சிறையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும், கும்பல் கொலை சதித் திட்டம் தீட்டுவோரும், அதற்கு உறுதுணையாக இருப்பவர்களும் இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் ஆலம் தெரிவித்துள்ளார்.

ஆனால் வழக்கம் போல் பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.