India
ஜெயிலில் இருந்தவாறே ரூ.200 கோடி மோசடி செய்த சுகேஷ் சந்திரசேகர்.. அமலாக்கத்துறை விசாரணையில் ‘பகீர்’ தகவல்!
மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், சிறையிலிருந்தபடியே பிரபல தொழிலதிபரை சிறையில் இருந்து விடுவிப்பதாகக் கூறி அவரது மனைவியிடம் இருந்து 200 கோடி ரூபாய் மோசடி செய்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் பல மோசடி வழக்குகளில் சிக்கியுள்ளார். பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு சென்னைக்கு அருகே மிகப்பெரிய சொகுசு பங்களா, 20க்கும் மேற்பட்ட கார்கள் என சொகுசாக வாழ்ந்துள்ளார்.
சுகேஷ் சந்திரசேகர், இரட்டை இலை சின்னத்தை மீட்க, டி.டி.வி.தினகரன் தரப்புக்காக, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.
'ரான்பாக்சி' என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவராக இருந்தவர் பிரபல தொழிலதிபர் சுக்விந்தர் சிங். கடந்த 2019ஆம் ஆண்டு பண மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு ஜாமின் கிடைக்க ஏற்பாடு செய்வதாக அவரது மனைவி அதிதி சிங்குடன் மொபைல் போனில் பேசி பல தவணைகளில் 200 கோடி ரூபாயை சுகேஷ் சந்திரசேகர் வாங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், “தன் கணவருக்கு ஜாமின் கிடைப்பதற்காக அதிதி சிங் முயற்சித்துள்ளார். அந்த நேரத்தில் ஒன்றிய உள்துறை செயலர் சட்டத்துறை செயலர் என முக்கிய அதிகாரிகளின் பெயரில் சுகேஷ் அவரிடம் பேசியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜாமின் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்வதாக அவர் கூறி அதிதி சிங்கை நம்ப வைத்துள்ளார். அதிதியின் சகோதரி அருந்ததி கன்னாவும் பேசியுள்ளார். முதலில் மிகுந்த நம்பிக்கையுடன் பேசிய சகோதரிகள் ஒரு கட்டத்தில் சந்தேகம்டைந்தனர். அதை புரிந்து கொண்ட சுகேஷ் அவர்களை மிரட்டவும் செய்துள்ளார்.
இந்த விவகாரம் அமலாக்கத்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து மொபைல் போனில் வரும் அழைப்புகளை பதிவு செய்யும்படி அதிதிக்கு அறிவுறுத்தினர். அதன்படி 84 அழைப்புகளை அதிதி பதிவு செய்துள்ளார். அவற்றை ஆய்வு செய்தபோது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
இந்த அனைத்து அழைப்புகளையும் சிறையில் இருந்தே சுகேஷ் செய்துள்ளார். அதே நேரத்தில் குறிப்பிட்ட அதிகாரிகளின் உண்மையான தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பதுபோல் மோசடி செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர்.
சிறையிலிருந்தபடியே பிரபல தொழிலதிபரை சிறையில் இருந்து விடுவிப்பதாகக் கூறி அவரது மனைவியிடம் இருந்து 200 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
5 கி.மீ தூரம் நடைபயணம் : தமிழ் வெல்லும்' - கலைஞர் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !