File Image
India

தமிழக பன்னாட்டு விமான நிலையங்கள் தனியார் மயமாகிறதா? மக்களவையில் கேள்விக்கணைகளை தொடுத்த டி.ஆர்.பாலு MP!

ஒன்றிய அரசும், இந்திய விமான நிலையங்கள் ஆணையமும் நாட்டில் உள்ள விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைத்திட திட்டமிட்டுள்ளதா? அப்படியானால் அதன் விவரங்கள் என்ன?

தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையம் எதனையாவது தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதா? அந்த விமான நிலையங்கள் எவை எவை?

தனியார் வசம் ஒப்படைக்கும்போது பரந்து விரிந்துள்ள விமான நிலையங்களின் நிலம் உட்பட சொத்துக்கள் முழுவதும் தனியாருக்கு தரப்படுமா? என்று பல்வேறு கேள்விகளை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம், முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு எழுப்பி இருந்தார்.

மக்களவையில் இந்தக் கேள்விகளுக்கு இன்று (9.12.2021) பதிலளித்த ஒன்றிய விமானத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் அவர்கள், 2022 தொடங்கி 2025ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் நாட்டில் உள்ள 25 விமான நிலையங்களை சிறந்த முறையில் விரைந்து மேம்படுத்தவும், திறம்பட இயக்கிடவும் சிறப்பான மேலாண்மைக்காகவும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

அரசு -தனியார் பங்கேற்பு திட்டத்தின் அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ள 25 விமான நிலையங்களில் தமிழகத்தில் உள்ள திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் சென்னை விமான நிலையங்களும் அடங்கும்.

இந்திய விமான நிலையங்கள் ஆணையம், திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தின் பொதுநலனைக் கருத்தில் கொண்டு தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை எடுத்துள்ளது. அதன்படி, விமான நிலைய வசதிகளை மேம்படுத்தவும், சிறப்பாக இயக்கவும் தனியார் வசம் ஒப்படைக்கப்படும்.

எனினும், விமான நிலையங்களின் நிலம் உள்ளிட்ட சொத்துக்கள் அனைத்தும் ஆணையத்தின் சொத்துக்களாகவே தொடரும்; உரிமக் காலம் முடிவடைந்தவுடன் சொத்துக்கள் அனைத்தும் மீண்டும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வசம் திரும்பி வந்துவிடும். இவ்வாறு, மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்விக்கு விமானத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் விரிவான பதில் அளித்தார்.

Also Read: CAA-ஐ திரும்பப் பெறுவதற்கான உங்களின் நிலைப்பாடு என்ன? - ஒன்றிய அரசுக்கு தயாநிதிமாறன் MP கேள்வி!