India

"அரசுக்கு ஆதரவா தீர்ப்பு கொடுத்தா பணி ஓய்வுக்குப் பிறகு பதவியா?” : மக்களவையில் தயாநிதி மாறன் விளாசல்!

“71 ஆண்டுகள் ஆன பிறகும் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கூட வரவில்லை?” என மக்களவையில் தி.மு.க எம்.பி.தயாநிதி மாறன் பேசியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஊதியம், பணி நிலைமை திருத்த மசோதா விவாதத்தில் மத்திய சென்னை தி.மு.க மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் பேசினார்.

அப்போது பேசிய அவர், “நீதித்துறையில் ஆட்சியாளர்கள் செல்வாக்கு செலுத்துவதாக சாதாரண மக்களுக்கு சந்தேகம் உள்ளது. மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் நீதித்துறையில் அரசு தலையிட வேண்டாம். நீதித்துறை மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்; ஆனால் அண்மை நிகழ்வுகள் மக்களிடம் சந்தேகங்களை எழுப்பி உள்ளன.

அரசுக்கு ஆதரவான தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகளுக்கு பணி ஓய்வுக்குப் பிறகு பதவிகள் வழங்கப்படுகின்றன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெற்ற பின் ஆளுநர்களாகவும், எம்.பி.க்களாகவும் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.

பொதுமக்களின் பார்வையில் நீதிபதிகள் அப்பழுக்கற்றவர்களாக இருக்கவேண்டும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் ஆளுநராகப் பதவி வகித்தால் யாருக்கு உரிய ஓய்வூதியத்தைப் பெறுவார்?

இந்திய தலைமை நீதிபதி ஓய்வு பெற்றபின் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தால் எந்த ஓய்வூதியத்தை பெறுவார்? உச்சநீதிமன்ற நீதிபதிக்கு உரிய ஓய்வூதியத்தைப் பெறுவாரா? ஆளுநருக்கோ, எம்.பிக்கோ உரிய ஓய்வூதியத்தைப் பெறுவாரா?

இறுதியாக வகித்த பதவிக்கு உரிய ஓய்வூதியத்தை பெறுவார் என்பதை திட்டவட்டமாக முடிவு செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் இந்தியாவின் சமூகப் பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதாக இல்லை. 71 ஆண்டுகள் ஆன பிறகும் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இருந்ததில்லை.

இத்தனை ஆண்டுகளில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 5 பேர்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் இதுவரை கிடைக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

Also Read: "இந்தியாவின் பட்டினி நிலையை தடுக்க ஒன்றிய அரசின் நடவடிக்கை என்ன?": டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி!