India

”சார்.. நான் கறந்தா மட்டும் என் மாடு பால் கொடுக்க மறுக்குது” - போலிஸிடம் முறையிட்ட கர்நாடக விவசாயி!

இந்தியாவில் உள்ள காவல் நிலையங்களில் அண்மைக் காலங்களாக விநோதமான பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதில் சில நகைப்பை ஏற்படுத்தினாலும், இதற்கெல்லாம் காவல் நிலையத்தை நாடுவதா என்று முகம் சுழிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைகிறது.

இப்படி இருக்கையில், கர்நாடகவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது மாடு தான் பால் கறக்கும் போது மட்டும் பாலை தருவதில்லை எனக் கூறி போலிஸை நாடியிருக்கிறார்.

சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள பத்ராவதி தாலுகா சித்லிப்புரா கிராமத்தைச் சேர்ந்தவர்தான் விவசாயி ராமையா. இவர்தான் ஹோலேஹொன்னூர் காவல்நிலையத்தில் மேற்குறிப்பிட்ட புகாரை அளித்துள்ளார்.

அதில், தான் தினசரி தன்னுடைய பசுவை காலை 8 முதல் 11 மணி வரையும், மாலை 4 முதல் 6 வரையும் புல் மேய்பதற்காக அழைத்துச் செல்வேன். ஆனால் நான் பால் கறக்கும் போது பாலை தர பசு மறுக்கிறது. அதேவேளையில் தன்னுடைய மனைவி ரத்னம்மா பால் கறந்தால் மட்டும் பாலை கொடுக்கிறது. இதனால் அந்த பசு தன்னை எட்டி உதைப்பது மட்டும்தான் மிச்சம். எனவே பால் கறக்கும்படி நல்ல புத்திமதியை கூறுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த புகாரை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலிஸாரோ சற்று நேரத்திற்கு பிறகு புகார் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து விவசாயி ராமைய்யாவை சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

Also Read: ”திருமணம் ரத்தான போதும் விருந்தினர்களை உபசரித்து அனுப்பிய பெற்றோர்” - வேலூரில் நடந்த ருசிகர நிகழ்வு!